ஒரு வீலுக்கு 5 ஆயிரம் ஃபைன்.. தீட்டிய கேரள அதிகாரி.. தமிழ்நாடு கார் என்றால் பாரபட்சமா? பரவும் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர்களின் காரை மடக்கிய அங்குள்ள அதிகாரிகள் பாரபட்சத்துடன் அபராதம் விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்று கேரளா... தமிழ்நாட்டில் இருந்து வியாபாரம், கல்வி, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவிற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் வந்து செல்கிறார்கள். இதனால், தினமும் நூற்றுக்கணக்கான தமிழக வாகனங்கள் கேரளாவிற்கு வந்து செல்கின்றன.

கேரள அதிகாரிகள்: சில நேரங்களில் கேரளாவிற்கு செல்லும் தமிழக வாகனங்களுக்கு பாரபட்சத்துடன் அதிகாரிகள் அபராதம் விதிப்பதாக தமிழக வாகன ஓட்டிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பொலிரோ கார் ஒன்றில் இளைஞர்கள் சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அவர்களின் காரை மடக்கிய கேரள மோட்டார் வாகன அதிகாரி, விதி மீறலுக்காக பல ஆயிரம் அபராதம் விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு வீலுக்கு 5 ஆயிரம்: இது தொடர்பாக காரில் சென்ற தமிழக நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் விவரங்களை பார்க்கலாம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பொலிரோ காரில் இளைஞர்கள் சிலர் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
தமிழக பதிவெண் கொண்ட அந்த பொலிரோ காரை மடக்கிய கேரள மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள், பொலிரோ காரில் விதியை மீறி அகலமான அலாய் சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறி வீலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஸ்டெப்னி வீலுக்கும் சேர்த்து 25 ஆயிரம் அபராதம் விதித்ததாக தமிழகத்தை சேர்ந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள காரை விட்டது ஏன்?: அதே போல கண்ணாடியில் சன்பிலிம் ஒட்டியதற்காக ரூ.250 அபராதம் விதித்தாகவும் வேதனை தெரிவித்தார். அதே நேரத்தில் இதே விதி மீறலுடன் வந்த கேரள பதிவெண் கொண்ட ஃபார்ட்சுனர் காருக்கு எந்த ஒரு அபராதமும் விதிக்காமல் அதிகாரிகள் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக நபர், கேரள அதிகாரியிடம் அந்த காரை மட்டும் விட்டது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஏன் பாரபட்சம்: விதி மீறலுக்கு அபராதம் கட்ட தயாராக இருக்கிறோம்.. ஆனால், கேரள வாகனத்தை மட்டும் விடுவது ஏன் என தனது ஆதங்கத்தை தெரிவித்த தமிழக இளைஞர், சிம் செல்லில் இது தொடர்பாக புகாரளிக்க இருப்பதாகவும் அந்த அதிகாரியிடம் கூறுகிறார்... இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விதி மீறல் இருந்தால் அபராதம் விதிப்பது தவறு இல்லை.. ஆனால், அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டுமே தவிர.. தமிழக வாகனத்திற்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications