இஸ்லாமிற்கு எதிராக பேசிய கேரள பாதிரியார்.. கொதித்து போன கன்னியாஸ்திரிகள்- சர்ச்சிலிருந்து வெளிநடப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிரியார் ஒருவர் வழிபாட்டின்போது இஸ்லாமிற்கு எதிராக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாஸ்திரிகள் எல்லோரும் சர்ச்சில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு மதத்திற்கு எதிராக பாதிரியார் பேசியது தவறு என்று கூறி இவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள குருவிலங்காடு சர்ச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. குருவிலங்காடு சர்ச் பாதிரியார் சார்பாக சிறப்பு வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்தான் பாதிரியார் பேசிய கருத்துக்கள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக கூறி அங்கிருந்து கன்னியாஸ்திரிகள் வெளியேறி உள்ளனர். அதோடு சர்ச்சுக்கு உள்ளேயே பாதிரியாருக்கு எதிராக இவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து பேசியதாக கூறப்படுகிறது.

என்ன பேசினார்
இஸ்லாமியர்கள் குறித்தும், இஸ்லாம் மதம் குறித்தும் இவர் தவறாக பேசி இருக்கிறார். அதோடு கிறிஸ்துவர்களை குழந்தை பெற்றுக்கொள்ள விடாமல் சில கெமிக்கல்களை வைத்து மாற்று மதத்தினர் தடுக்கிறார்கள் என்றும் இஸ்லாமை விமர்சனம் செய்து அந்த பாதிரியார் பேசி இருக்கிறார். கிறிஸ்துவர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு இஸ்லாமிற்கு எதிராக சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.

எதிர்ப்பு
இந்த நிலையில்தான் பாதிரியாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக பேசி இருக்க கூடாது. வேறு மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை சொல்லும் இடம் தேவாலயம் கிடையாது. ஒற்றுமை பற்றி எடுத்துரைக்காமல் வெறுப்பை உமிழும் வகையில் நீங்கள் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கூட்டத்தில் நாங்கள் மேலும் தொடர முடியாது என்பதால் நாங்கள் வெளியேறுகிறோம் என்று கூறி அங்கிருந்து கன்னியாஸ்திரிகள் வெளியேறி உள்ளனர்.

வெளியேற்றம்
அல்பி, நினா ரோஸ், அன்சிட்டா, அனுபமா, ஜோஸ்பின் ஆகிய கன்னியாஸ்திரிகள் பாதிரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கருத்தை தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதன்பின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அவர் இஸ்லாமிற்கு எதிராக பேசிய போது நாங்கள் அவரை தடுத்தோம். இப்படி பேச வேண்டாம். இது தவறானது என்று கூறினோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. அதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினோம், என்று குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் மார் ஜோசப் என்ற பிஷப் இதேபோல் இஸ்லாமிற்கு எதிராக பேசினார். இஸ்லாம் மதத்தையும் போதை பொருள் விற்பனையையும் ஒப்பிட்டு பிஷப் பேசி இருந்தார்.

ஆதரவு
அந்த பிஷப்பிற்கு ஆதரவாகவும் குருவிலங்காடு சர்ச் பாதிரியார் நேற்று கூட்டத்தில் பேசி உள்ளார். இதற்கும் அவையிலே எதிர்ப்பு தெரிவித்ததாக கன்னியாஸ்திரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாம் என்று இல்லை எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்பு கருத்துக்களை நாம் பேச கூடாது. நாங்கள் பல இஸ்லாமியர்களுடன் பேசி இருக்கிறோம். அவர்கள் எல்லோருமே நல்லவர்கள். எங்களிடம் அன்பாக பழகி இருக்கிறார்கள். கேரளாவில் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில், இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவது தவறு என்று கன்னியாஸ்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆச்சர்யம்
பாதிரியார் ஒருவரை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் வெளிநடப்பு செய்த இந்த விஷயம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மத ஒருமைப்பாட்டிற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. மாற்று மதம் குறித்து தவறாக பேசியதால் சொந்த மதத்தின் பாதிரியாரையே எதிர்த்து கன்னியாஸ்திரிகள் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கன்னியாஸ்திரிகள் துணிச்சலை கேரளா மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications