கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான்.. கர்நாடகா, ராஜஸ்தானை ஓவர்டேக் செய்தது.. மொத்த பாதிப்பு எத்தனை
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 24 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. மாத இறுதியில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. மற்ற உருமாறிய வைரஸ்களை காட்டிலும் இது வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா, ஏற்கனவே உலகில் பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. வரும் காலங்களில் அது அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
இந்தியாவில் ஓமிக்ரான்
இந்தியாவைப் பொறுத்தவரைக் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முதல்முறையாக ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அடுத்த அலை ஏற்படலாம் என ஐஐடி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் மேலும் 9 பேருக்குப் பாதிப்பு
இந்தச் சூழலில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த 6 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதேபோல திருவனந்தபுரம் வந்த வெளிநாட்டுப் பயணிகளில் மூவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகம் உள்ள மாநிலங்கள்
இதன் மூலம் நாட்டில் அதிக கொரோனா கேஸ்கள் கண்டறியப்பட்ட மாநிலங்களில் எண்ணிக்கையில் கர்நாடக மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை மிஞ்சியுள்ளது கேரளா. தற்போது நாட்டில் அதிக ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் கேரளா 3ஆம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 57 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகியுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தெலங்கானா (24), ராஜஸ்தான் (22), கர்நாடகா(19), குஜராத் (14) ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
ஓமிக்ரான் கொரோனா வேகாக பரவலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாகப் பரவும் என்ற போதிலும் அது எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெளிவான தரவுகள் இல்லை. இதன் காரணமாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது.
Recommended Video
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. தமிழ்நாட்டில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை கர்நாடகாவிலும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல நேற்று தலைநகர் டெல்லியும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.