கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் மாநில அரசு
கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் மிக அதிகமாகும். கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் கோரதாண்டவமாடத் தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு 31,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் வீரியமாக பரவி வருகிறது கொரோனா. தொற்று பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் நேற்று 37,593 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 25, 58,530 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,159 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,17,88,440 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,33,725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்
மொத்த கொரோனா பாதிப்பில் கேரளாவில் மட்டும் 68 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கடவுளின் தேசம் என கொண்டாடப்படும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு தொற்று பரவியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இது அதிகபட்சமாகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் 4,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் மாவட்டத்தில் 3,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 3வது அலை
கேரளாவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றின் வேகம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மாநிலத்தில் 24296 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு தொற்று பரவியுள்ளது. கேரளாவில் பரிசோதனை பாசிட்டிவ் சதவிகிதம் 19.03%ஆகும், இது கடந்த மூன்று மாதங்களில் மிக அதிகமாகும்.

ஓணம் கொண்டாட்டம்
கேரளா மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் தினம் தினம் திருவிழாக்கள் நடைபெற்றன. பண்டிகைக்காக மக்கள் பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்றனர். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டன. இதுவே தொற்று அதிகரிக்க காரணமாகும்.

தடுப்பூசி முகாம்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்குப் பிறகு தொற்று அதிகரித்துள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பரிசோதனை, தடுப்பூசியை அதிகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
Recommended Video

ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை
கேரளாவில் தற்போது பாசிட்டிவ் டிபிஆர் சதவிகிதம் 19.3% ஆக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் கிட்டத்தட்ட 20 பேருக்கு அங்கு கொரோனா ஏற்படுகிறது. அந்த அளவிற்கு கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது. கேரளாவில் இதுவரை கொரோனா காரணமாக 19,972 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 36,72,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,59,355 ஆக உள்ளது.

செரோ சர்வே மதிப்பு
கேரளாவில் செரோ சர்வே மதிப்பு குறைவாக இருப்பதும் அங்கு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது கேரளாவில்தான் இந்தியாவிலேயே குறைவான மக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி நோய் எதிர்ப்பு சக்தியை குறைவாக பெற்றுள்ளனர். கேரளாவில் செரோ சர்வே எனப்படும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மக்களை கணக்கெடுக்கும் சர்வேயில் 44 சதவிகிதம் மக்களே இதுவரை பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய அளவோடு 67% ஒப்பிடும் போது கேரளாவில் குறைந்த மக்களே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும்.

தரிசனத்திற்கு அனுமதி
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் குருவாயூர் கோவில்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என குருவாயூர் தேவஸ்தான தலைவர் மோகன்தாஸ் அறிவித்துள்ளார். குருவாயூர் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு தற்போது 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்பதிவு செய்யும் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள்
இதனை கருத்தில் கொண்டு, கூடுதல் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தினசரி 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு அமல்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஞாயிறன்று முழு லாக்டவுன் ரத்து செய்யப்பட்டது. தற்போது தினசரி தொற்று 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதால் மீண்டும் வரும் ஞாயிறு முதல் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கடைகள், வணிக மால்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications