ஓலா, ஊபர் செயலிகளுக்கு செக்.. ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கிய கேரளா அரசு!
திருவனந்தபுரம்: ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளுக்கு மாற்றாக, கேரள அரசு சார்பாக கேரள சவாரி என்ற ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Recommended Video
நகரங்களில் வாழும் மக்கள் குடும்பமாக வெளியில் செல்ல வேண்டுமென்றாம், கார் கட்டாயம் என்ற நிலை உருவாகி வருகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கார் வாங்குவதற்கு, பதிலாக பெரும்பாலும் டாக்சிகளையே பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப் டாக்சி சேவைகளை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் ஓலா, ஊபர் ஆப்கள் மூலம் சேவைகளை புக் செய்யும் போது, கார் ஓட்டுநருக்கு வழங்கப்படும் கட்டணத்தில் 20 முதல் 30 சதவிகிதம் வரை ஆன்லைன் ஆப்கள் கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன. இதற்காகவே பெரும்பாலான டாக்சி ஓட்டுநர்கள் ஆன்லைன் வாயிலாக கட்டணம் பெற முடியாமல், கையில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
டாக்சி ஓட்டுநர்கள்
அதுமட்டுமல்லாமல் சனி, ஞாயிறு, இரவு, மழை உள்ளிட்ட நேரங்களில் ஆன்லைன் ஆப்களில் டாக்சி கட்டணம் அசாதாரணமாக உயர்த்தப்படும். இதனை யாரிடம் சென்று கேள்வி கேட்கலாம் என்று கூட அடிப்படைகள் மக்களுக்கு தெரியும் வகையில் இருப்பதில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாக்சி ஓட்டுநர்கள் அவ்வப்போது போராட்டத்தில் கூட ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஆன்லைன் டாக்சி செயலிகளில் பல்வேறு பிரச்னைகளை மக்களும், டாக்சி ஓட்டுநர்களும் அனுபவித்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் கேரள அரசு, முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, தனியார் ஆன்லைன் வாடகை டாக்சி சேவையை போலவே, கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கேரளா சவாரி
'கேரளா சவாரி' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இ-டாக்சி சேவை நேற்று முதல் கேரளாவில் அமலுக்கு வந்துள்ளது. இந்த இ-டாக்சி சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் டாக்சி போன்று அல்லாமல், டாக்சி ஓட்டுநர்களிடம் இருந்து 8% மட்டுமே கேரள அரசு கமிஷன் பெறவுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் இந்த டாக்சியை புக் செய்து கொள்ளலாம். இதற்காக கேரளா சவாரி என ஆன்லைனில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த திட்டத்தில் இணைய விரும்பும் டாக்சி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் டாக்சி ஓட்டுநர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் பயணிகள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆன்லைன் செயலியில் டேஞ்சர் பட்டன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதங்களோ, இல்லை பிரச்னைகளோ ஏற்பட்டால், ஆன்லைன் செயலியில் இருக்கும் டேஞ்சர் பட்டனை அழுத்தினால், அது உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிடும். இதனால் அரசின் ஆன்லைன் செயலி மூலம் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
ஜிபிஎஸ் சேவை
இந்த திட்டத்தின் கீழ் இணையும் வாகனங்களில் ஜிபிஎஸ் சேவைகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா சவாரி சேவைக்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் சேவை தொடங்கப்பட்ட ஒரே நாளில், 228 டாக்சிகளும், 321 ஆட்டோக்களும் சேவையில் இணைந்துள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.