கடவுள் தேசத்தில் சிக்கிய சாத்தான்கள்..நரபலியால் நடுங்கிப்போன கேரளா.. தோண்ட தோண்ட கிளம்பும் பூதங்கள்
திருவனந்தபுரம்: நரபலி சம்பவங்களால் கடவுளின் தேசமான கேரளா நடுங்கிப்போயுள்ளது. இந்த நாகரீக உலகத்தில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் நரபலி கொடுத்த சாத்தான்கள், இளமையாக இருக்க கொன்றவர்களை கூறு போட்டு நரமாமிசம் சமைத்து சாப்பிட்டிருக்கின்றனர். காவல்துறை விசாரணையில் தோண்ட தோண்ட பல பூதங்கள் கிளம்புகின்றன.
மண்ணாசை..பொன்னாசை..பெண்ணாசை இந்த மூன்றும்தான் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது. எல்லாரையும் விட பணக்காரன் ஆக வேண்டும் என்ற பேரசையில் இரண்டு உயிர்களை கொன்று ரத்தம் குடித்துள்ளனர் சில சாத்தான்கள். குரூர மனம் கொண்ட அந்த சாத்தான்களின் செயலைப்பற்றி காவல்துறையினர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த சாத்தான்கள் பிடியில் சிக்கி உயிரை இழந்தது வயிற்றுப் பிழைப்புக்காக லாட்டரி சீட்டு விற்ற அப்பாவி பெண்கள்தான். என்னதான் நடந்தது கேரளாவில் நரபலி நடந்த போது நடந்தது என்ன என்று விசாரணையில் மந்திரவாதி கூறியுள்ளது தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்புவது போல உள்ளது.
நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?
அப்பாவி பெண்கள்
நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் பெயர் பத்மா, ரோஸ்லின் என்பதாகும். இதில் பத்மா தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்பனை செய்து வந்தார். இந்த இருவரையும் அணுகிய முகம்மது ஷபி பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.
போலி மந்திரவாதி
பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா - பகவந்த் சிங் தம்பதியினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளனர். போலி மந்திரவாதி முகம்மது ஷபி பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள பகவல் சிங்கை தொடர்புகொண்டுள்ளார். உடல் நலம் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும் ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
பணம் சம்பாதிக்க நரபலி
பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் பணம் மழையாக கொட்டும் என கூறியுள்ளார். மேலும் நரபலிக்கு தேவையான பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் ஷபி கூறியுள்ளார். இதற்காக 15 ஆயிரத்தை முகமது ஷபி முன்பணமாக வாங்கி உள்ளார்.
ரூ.10 லட்சம்
லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று ஷபி மற்றும் பகவல்சிங் லைலா முதலில் நரபலி கொடுத்துள்ளனர். இதற்கு உரிய பலன் கிடைக்காத காரணத்தால் லாட்டரி விற்று வந்த பத்மாவையும் நரபலி கொடுத்துள்ளனர். இந்த இரண்டு பேரையும் வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறியே முகமது ஷபி அழைத்து வந்து உள்ளார்.
நரபலி பூஜை
பகவல் சிங் வீட்டில்தான் சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாகக் கட்டிலில் கட்டி வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அந்தரங்க உறுப்புகளையும் அறுத்து ரத்தம் எடுத்துள்ளனர். பூஜையின் போது ஷபி, கணவர் பகவந்த் சிங் முன் லைலாவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
நர மாமிசம்
இதனையடுத்து நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷபி கூறியதின் அடிப்படையில் இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். இரண்டு பெண்களின் உடல்களும் கூறு போடப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் உறவினர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு பெண்களின் உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
சைக்கோ ஷபி
ஷபி ஒரு சைக்கோவாக இருக்கலாம். விசாரணையில் யாரையும் கொன்று விடுவேன் என்றும், ரத்தத்தைக் கண்டு அஞ்சமாட்டேன் என்றும் ஷபி கூறியுள்ளார். முகம்மது ஷபி மீது கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது.
சிறப்பு புலனாய்வுக்குழு
போலி மந்திரவாதி ஷபியால் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் கொல்லப்பட்டனரா? அல்லது இது போல பலரை கொன்று கூறு போட்டு புதைத்துள்ளானா என்பதை அறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ( SIT) கேரள காவல்துறைத் தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கொச்சி துணை போலீஸ் கமிஷனர் சசிதரன் எஸ்ஐடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பாவூர் ஏஎஸ்பி அனுஜ் பாலிவால் தலைமை விசாரணை அதிகாரியாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்கள் ஆட்டம்
கடவுளின் தேசத்தில் சாத்தான்களால் நிகழ்த்தப்பட்ட நரபலி சம்பவம் கடந்த சில நாட்களாகவே பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. திகில்..திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சினிமாவில் கூட இப்படி எல்லாம் யோசிக்க மாட்டார்கள்...இது போன்ற சாத்தான்களை ஒருபோதும் வெளியே விட்டு விடக்கூடாது என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.