12 வயது கனவு.. அரசின் உதவியால் விமானப் பணி கனவை எட்டிப்பிடித்த பழங்குடியின பெண்.. குவியும் பாராட்டு!
திருவனந்தபுரம்: கேரள அரசின் திட்டத்தால், முதல்முறையாக பழங்குடி இன பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்ததற்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பழங்குடி மற்றும் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கவும், அரசுப் பணிகளைப் பெறவும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் அந்த திட்டங்கள் சார்ந்தோரை சென்று சேர்கிறதா என்ற கேள்வியும் உள்ளன. இதனால் அரசின் திட்டங்களையும் சம்மந்தப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்ல அரசின் சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் அரசு சார்பாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெறவும், வேலை வாய்ப்புகளில் சேரவும் பல்வேறு முயற்சிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு பலனாக, கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடி இன இளம்பெண் விமான பணிப்பெண் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

பழங்குடி இன பெண்
கேரளாவில் பழங்குடி இன பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேர இருப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து பழங்குடி இன பெண்ணான கோபிகா கூறுகையில், ஒவ்வொரு முறை வானில் விமானத்தை பார்க்கும் போதும், அந்த நொடியில் எனக்குள் மகிழ்ச்சி ஏற்படும். 12 வயதிலேயே விமானத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை வந்தது. அது நாளடைவில் கனவாகவும் மாறியது. வானை தொட வேண்டும் என்ற கனவை நான் யாரிடமும் கூறியதில்லை. ஏன் எனது பெற்றோருக்கு கூட என் கனவு குறித்து தெரியாது என்று தெரிவிக்கிறார்.

நொறுங்கிய கனவு
பள்ளிக் கல்வியை முடித்து விமான பணிப்பெண் ஆசையை நிறைவேற்றும் வகையில், அதற்கான தகவல்களை கோபிகா சேமிக்க தொடங்கியுள்ளார். அப்படி சேமித்தவருக்கு, அவரது நம்பிக்கை மொத்தமாக நொறுங்கியுள்ளது. அந்த படிப்புக்கான பணத்தை தன் குடும்பத்தினரால் கட்ட முடியாது என்ற தெரிய வந்த போது, கோபிகா இடிந்து போய் உட்கார்ந்துள்ளார்.

கல்வி உதவித்தொகை
ஆனால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அந்தந்த நொடிகளில் நடப்பதுதான். அப்போது கேரள அரசின் பழங்குடி இன மாணவர்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணூரில் எம்எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டே, வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் பள்ளியில் விமான பணிப்பெண்ணிற்கு பயிற்சியை பெற்று வந்துள்ளார்.

கோபிகா பேட்டி
இதுகுறித்து கோபிகா கூறுகையில், பழங்குடி மாணவர்களுக்கு இப்படி ஒரு கல்வித் திட்டம் இருப்பதே எனக்கு தெரியாது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்திற்கும் மேல் அரசு எனக்காக செலுத்தியுள்ளது. நான் இதுவரை படிப்புக்காக பணம் செலுத்தவே இல்லை. என் கனவை எட்டிப்பிடிக்க முடிந்ததற்கு, கேரள அரசும், பயிற்சி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுமே காரணம் என்று தெரிவித்தார்.

குவியும் பாராட்டு
அண்மையில் கேரளாவில் அரசுத் திட்டத்தின் கீழ் படித்த எஸ்டி பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கோபிகா சான்றிதழ் பெற்றதன் மூலம், அவர் குறித்து அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் கோபிகா விமான பணிப்பெண் உடையுடன் இருக்கும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இதை பார்த்த பலரும், பழங்குடி இன மக்களுக்கு பெருமை சேர்ந்த கோபிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications