'மேடம்', 'சார்' எல்லாம் வேண்டாம்.. 'டீச்சர்' மட்டுமே போதும் - கேரளாவில் புதிய முயற்சி
திருவனந்தபுரம்: பள்ளி ஆசிரியர்களை சார், மேடம் என அழைப்பதை நிறுத்திவிட்டு 'டீச்சர்' என்றே அழைக்க வேண்டும் என்று கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உத்தரவிடுமாறும் பொதுக்கல்வி இயக்குநருக்கு அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர்களிடத்தில் பாலின பாகுபாட்டை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆஃபரை அள்ளித் தரும் முதல்வர் ஸ்டாலின்!
கொச்சையாகும் ஆசிரியர் - மாணவர் உறவு
ஆசிரியர் - மாணவர் உறவு சமீபகாலமாக மிகவும் மோசமாகி வருகிறது. மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை தருவதும், ஆசிரியையை மாணவன் திருமணம் செய்து கொள்வதுமான அபத்தங்கள் அன்றாட செய்திகளை போல மாறிவிட்டன. இதற்கு தீர்வு காணவும், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
"சார்", "மேடம்" எதற்கு?
இதனிடையே, கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த மாதம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், "ஆசிரியர்களை மாணவர்கள் சார் என்றும், ஆசிரியைகளை மேடம் என்றும் அழைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதில் தவறு இல்லை என்பது போலவே தோன்றும். ஆனால், சற்று ஆழமாக செனறு பார்த்தால் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை திணிக்கும் முக்கிய காரணியாக இந்த 'சார்', 'மேடம்' ஆகிய பதங்கள் இருப்பதை அறிய முடியும். இந்த பாலின பாகுபாடுதான் தேவையில்லாத சிக்கல்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. எனவே, சார், மேடம் என்ற சொல்லாடல்களை பள்ளியில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"பாலினத்திற்கு அப்பாற்பட்டவர்கள்"
இந்த மனுவானது, ஆணையத்தின் தலைவர் கே.வி. மனோஜ்குமார், உறுப்பினர் சி. விஜயகுமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீண்டநேர ஆய்வுக்கு பிறகு அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சார் அல்லது மேடம் என ஆசிரியர்களை அழைக்கும் போது பாலினப் பாகுபாடு நிச்சயம் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆசிரியர் என்பவர் பாலினத்திற்கு அப்பாற்பட்டவர்.
"டீச்சர் என்றே அழைக்க வேண்டும்"
ஆசிரியர், ஆசிரியை என யாராக இருந்தாலும் அவரை குரு ஸ்தானத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். அவர்களிடத்தில் பாலின பாகுபாட்டை விதைக்கும் சார், மேடம் என்ற சொல்லை கேரளாவில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, ஆசிரியர்கள், ஆசிரியைகளை பொதுவாக 'டீச்சர்' என்றுதான் அழைக்க வேண்டும். ஆசிரியர் - மாணவர்கள் இடையே 'டீச்சர்' என்ற சொல் நெருக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த நடைமுறையை கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக செயல்படுத்த பொதுக்கல்வி இயக்குநர் உத்தரவிட வேண்டும்" என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.