காங்கிரஸ் எம்பியால் வந்த வினை? 1.5 ஆண்டுகளாக கொரோனா இல்லாத கிராமத்தில்.. திடீரென 2 பேருக்கு தொற்று
திருவனந்தபுரம்: கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை தடுத்த கேரளா கிராமத்தில் தற்போது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடுக்கி காங்கிரஸ் எம்பி அங்கு முறையான ஒப்புதல் இன்றி நிகழ்ச்சி நடத்திய 16 நாட்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மோசமாக இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைகிறது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் வைரஸ் பாதிப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

கேரள கிராமம்
இருப்பினும், நாட்டிலுள்ள சில கிராமங்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் பாதிப்பை விலக்கியே வைத்திருந்தனர். அப்படி தான் தமிழ்நாடு எல்லையில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எடமலக்குடி என்ற பழங்குடியினர் கிராமத்தில் கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது

கொரோனா இல்லை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கு சமயத்தில் இருந்து எடமலக்குடி கிராமத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். அவசர தேவைகளுக்காக அருகிலுள்ள ஊருக்குச் செல்லும் நபர்களும்கூட 14 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். மாவட்ட சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருவருக்கு கொரோனா
இப்படி கடும் நடவடிக்கைகள் மூலம் கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை இந்தக் கிராம் தள்ளியே வைத்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இங்குள்ள இரண்டு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 40 மற்றும் 24 வயதான இருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் ஒருவர் மூணாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் மற்றொருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் எம்பி
முன்னதாக கடந்த ஜூன் 27ஆம்த தேதி இங்குள்ள பழங்குடியினர் பள்ளி புனரமைப்பிற்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இடுக்கி எம்பி டீன் குரியாக்கோஸ், யூடியூபர் சுஜித் பக்தன் ஆகியோர் கலந்துகொண்டார். மாஸ்க்கள், தனிமனித இடைவெளி எதுவும் இன்றி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள்
இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதியும் பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது நடந்து 16 நாட்களுக்குள் இரண்டு பேருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், யார் மூலம் அவர்களுக்கு கொரோனா பரவியது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் காங்கிரஸ் எம்பியின் பொறுப்பற்ற செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications