லட்சத்தீவில்.. பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த உத்தரவுக்கு.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தடை!
திருவனந்தபுரம்: லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளாவின் கடலோரத்தின் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது.
லட்சத்தீவில் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் அங்குள்ள மக்களுக்கு எதிராக பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது, சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மீனவர்களின் குடிசையை அகற்ற உத்தரவிடுதல் என பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து பிரஃபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன.
இது தொடர்பான ஒரு வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த பள்ளிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தல் மற்றும் பால் பண்ணைகள் மூடல் ஆகிய 2 உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க பிரஃபுல் கோடா படேலுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.