பினராயி விஜயன் மீண்டும் கேரள முதல்வராவது நிச்சயம் ஆனால்... டைம்ஸ் டவ் சி -வோட்டர் சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவில் இடதுசாரிகள் 74 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என டைம்ஸ் டவ் சி -வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், இன்று இந்த 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் டவ் சி-வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் கேரளாவில் 74 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் 65 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் 91 இடங்களைக் கைப்பற்றிருந்தனர். அதேபோல காங்கிரஸ் 47 இடங்களில் மட்டுமே வென்று இருந்தனர். டைம்ஸ் டவ் சி -வோட்டர் கருத்துக்கணிப்பின்படி 2016 உடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் 17 இடங்களை இழக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் 18 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. இது காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றினாலும்கூட, அது ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை.
மேலும், கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற பாஜக, இந்த முறையும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் டவ் சி- வோட்டர்வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல கைராலி நியூஸ் - CES வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 84-96 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் 44-56 இடங்களிலும் பாஜக 0-2 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.