மொத்தம் 2 முக்கிய காரணம்.. வேலூரில் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டி கொடுத்த பரபர பின்னணி
Recommended Video
சென்னை: "திமுக வெற்றி பெறுவது என்பது, வேலூர் தொகுதியில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பதுதான் கேள்விக்குறி.." என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்தார்.
ஆனால் வேலூர் தேர்தல் முடிவுகளை பார்த்தால், அப்படி தெரியவில்லை. காலை முதலே, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்கு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் கடும் போட்டியை கொடுத்தார்.
ஆரம்பத்தில் ஏசி சண்முகம் கதிர் ஆனந்தை விட அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று முன்னிலை வகித்து, திமுக தலைமை வயிற்றில் புளியை கரைத்தார்.
வேலூர் லோக்சபா தேர்தல்.. முத்தலாக் விவகாரத்தில் அதிமுக- திமுக நிலைப்பாடு.. சைட் எஃபக்ட்ஸ் யாருக்கு?
தீவிரம்
மதியம் 12 மணிக்கு மேல், கதிர் ஆனந்த் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஏசி சண்முகத்தை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற தொடங்கினார். இருப்பினும், ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் தன்னம்பிக்கையுடன் தெரிவித்த கருத்துக்களுக்கும், வேலூரில் கிடைத்த தேர்தல் முடிவுகளுக்கும், மலைக்கும் மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம் உள்ளது. வெறும் 8 ஆயிரம் சொச்சம் வாக்குகளில்தான் வென்றார் கதிர் ஆனந்த்.
கடும் போட்டி
முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான அளவில் உள்ள வேலூர் லோக்சபா தொகுதியில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இந்த அளவுக்கு கடுமையான போட்டியை கொடுப்பது எவ்வாறு என்று அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் கூறிய தகவல் சுவாரஸ்யமானது. இரண்டு விஷயங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு செல்லவில்லை என்று சொல்கிறார்கள்.
என்ஐஏ
அது என்ன இரண்டு விஷயங்கள்? முதல் விஷயம், NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்தத்திற்கு, திமுகவும் ஆதரவளித்து, வாக்களித்தது என்பது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இந்த சட்ட பிரிவின் மூலமாக தனி நபரையும் தீவிரவாதி என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியும். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக, தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு அச்சம் சமூகத்தில் நிலவுகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், பாஜக கொண்டு வந்த இந்த சட்டத்தை திமுக ஆதரித்தது தவறு என்ற கருத்து வேலூர் தொகுதியில் பரவலாக நிலவி வந்தது.
குடியரசு தலைவர்
இது மட்டுமின்றி மற்றொரு விஷயமும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த விஷயம், அப்துல் கலாமை இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக முன்மொழிய திமுக தயாராக இல்லை என்ற பழைய வரலாறு, அதிமுக தலைவர்களால் மிக தீவிரமாக இந்த தொகுதியில் பிரச்சாரத்தின்போது முன்வைக்கப்பட்டது. அப்போதைய திமுக தலைவர், மறைந்த கருணாநிதி, காங்கிரஸ் தலைமை முன்னிறுத்திய பிரதீபா பாட்டீலை, குடியரசுத் தலைவராக ஆதரவளித்தார்.
கலகம்
இதுதவிர, கலாம் என்றால் கலகம் என்று சொல்லி மீண்டும் அவரை குடியரசுத் தலைவராக ஆதரவு தரவில்லை என்ற பிரசாரம் சூடுபிடித்தது. இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக பெரிய அளவில் திரும்புவதை உணர்ந்துதான் வேலூரில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு சவால் விடுவதை போல ஸ்டாலின் பேசினார். அப்துல் கலாமை கசாப்பு கடைக்காரர் என்று கருணாநிதி தெரிவித்ததாக, பன்னீர்செல்வம் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு கருணாநிதி பேசியதாக நிரூபித்தால் நான் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயார் என்று உருக்கமாக பேசினார் ஸ்டாலின்.
இரு காரணங்கள்
அந்த அளவுக்கு கலாம் விவகாரம் வேலூர் மக்களவைத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது உண்மை. தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்தத்திற்கு திமுக ஆதரவு அளித்தது மற்றும், கலாம் தொடர்பாக கருணாநிதி கூறிய கருத்துகளும் அதிமுகவினரால் தீவிரமாக முன்வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் பலனை இன்றைய தேர்தல் ரிசல்ட் மக்கள் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.