ஐஐடி கல்வி நிறுவன நியமனங்களில் இடஒதுக்கீடு ரத்து செய்ய பரிந்துரைப்பதா? வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: ஐஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராம்கோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐஐடி கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

மேலும், ஐஐடி நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த வல்லுனர் குழுவின் பரிந்துரை என்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுநர் குழுவிற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதன் மூலம், ஐஐடி-கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பதில், உலக அளவில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்றும் வல்லுனர் குழு தனது அறிக்கையில் நஞ்சை உமிழ்ந்துள்ளது.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களின்போது இட ஒதுக்கீடு இல்லாத நிலை நீண்டகாலமாக நிலவி வந்தது. இதற்காக, 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் படி, மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.
ஆனால், அச்சட்டம் என்பது நடைமுறையில் பின்பற்றாமல், வெறும் ஏட்டளவிலேயே இருந்தது. இதனை மத்திய அரசின் கவனத்திற்கு, நாடாளுமன்றக்குழு கொண்டு சென்றது. இதனையடுத்து, ஆசிரியர் நியமனங்களில் முழுமையாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துச் சுற்றறிக்கை அனுப்பியது.
அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு 49.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஐஐடிகளின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு பிரிவினரின் விகிதம் எவ்வளவு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
இந்த நிலையில், இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அந்தச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கு, இப்போது டெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுனர் குழுவின் மூலம் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டால் ஐஐடிகளின் தரம் உயர்ந்துவிடும் என்று கூறுவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரை ஏமாற்றும் வேலை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
அதாவது, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின உள்ளிட்ட பிரிவினரை சேர்ந்த இளைஞர்கள் அனைவருமே, தகுதியற்றவர்களாக, வல்லுனர் குழுவோ அல்லது பாசிச மோடி அரசோ கருதுவது அப்பட்டமாக தெரிகிறது.
எனவே, சமூகநீதியை ஒழித்துக்கட்டும் ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுனர் குழுவின் மூலம் பரிந்துரையை தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2019-யை ரத்து செய்து விட்டு, உயர் தகுதிமிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும் என்ற சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications