புத்தாண்டு வாரத்தில் மழை எங்கு கொட்டும்? சென்னையில் என்ன கிளைமேட்.. வானிலை மையம் முக்கிய தகவல்
சென்னை: டிசம்பர் மாதம் முழுக்க தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்த நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் நல்ல மழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் நீர் இருந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் வரை ஆனது.

அதன் பிறகு கனமழை தென்தமிழகம் பக்கம் திரும்பியது. விடாமல் கொட்டிய கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இப்போது தான் மழை சற்று ஓய்ந்துள்ளது.
வானிலை மையம்: இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று டிச. 25 முதல் டிச. 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 28ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல டிச. 29 முதல் டிச. 31 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகர் (கடலூர்) 30 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல மரக்காணம் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 20 மிமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளைப் பொறுத்தவரை இன்று டிச.25 மற்றும் நாளை டிச.26ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.27 முதல் டிச. 29 வரையிலான நாட்களில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று டிச. 25ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.. நாளை டிச. 28ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications