தாமிரபரணியில் பெருவெள்ளம்.. கரையோர மக்களே கவனம்.. எச்சரிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு
திருநெல்வேலி: வரலாறு காணாத பெருமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 60ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை மளமளவென நிரம்பி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, கடனா, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளன. இது தவிர மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. ஞாயிறுக்கிழமை மாலையில் இது 139 அடியை தொட்டது. அணை பாதுகாப்பு கருதி தற்போது விநாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பேரிடர் காலத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தாமிரபரணியில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் பாபநாசம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது கரையாறு நீர்த்தேக்கம். 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தம், தலையணை ஆகிய பகுதிகள் கண்களுக்கு தெரியாத அளவிற்கு வெள்ள நீரால் நிரம்பியிருக்கிறது. தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் அம்பை, சேரன்மகாதேவி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் ஆற்றின் மேலிருக்கும் பாலத்தை தொட்டுச் செல்லும் அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல பகுதிகளிலும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications