இன்னைக்கு விடாது போல.. அடுத்த 2 மணி நேரம்.. சென்னை டூ குமரி வரை 28 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை
சென்னை: தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றும் இன்றும் வெயில் கொளுத்தி எடுத்தது. இந்நிலையில் இன்று இரவு மழை வெளுத்து எடுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது, இன்று இரவு 8.30 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி வந்தது. கோடை மழை காரணமாக வெயில் தெரியாமல் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து கொட்டத் தொடங்கி மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து எடுத்தது. இதனால் ஜில் கிளைமேட் இருந்தது.

இந்த நிலையில் நேற்றும், இன்றும் தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெயில் சுட்டெரித்த நிலையில், இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. எனினும் மதியத்திற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 8.30 மணி வரை விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, விருதுநகர், குமரி, திருப்பத்தூர் உள்பட 28 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று மதியம் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், "தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 4 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (02-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை இன்று தொடங்கி ஜூன் 4 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications