மூன்றாவது ஆண்டில் மோடி அரசு.. பெண்கள் நலனுக்காக கொண்டு வந்த உஜ்வாலா திட்டம் வெற்றியா, தோல்வியா?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து 3 வருடங்களாகியுள்ள நிலையில், அரசு கொண்டுவந்த எல்பிஜி காஸ் சிலிண்டர் வழங்கும், உஜ்வலா திட்டத்தின் வெற்றி, தோல்வி குறித்து ஒரு அலசல் இது.
ரன்னிடி கன்சல்டிங் அண்ட் ரிசர்ச் நிர்வாக இயக்குனர் நிதின் மேத்தா, ஆய்வாளர் பிரணவ் குப்தா ஆகியோர் இதுகுறித்து வழங்கியுள்ள ஆய்வு கட்டுரையின் சாராம்சம் இதோ:
மூன்று ஆண்டுகளில் பிபிஎல் குடும்பங்களுக்கு 5 கோடி எல்பிஜி இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மே 2016 ல் உஜ்வலா திட்டம் தொடங்கப்பட்டது. நாடெங்கிலும் மில்லியன் கணக்கான குடும்பங்கள் மண்ணெண்ணெய், விறகு, நிலக்கரி, மாட்டு சாணம் போன்றவற்றை எரிபொருளாகக் கொண்டு அடுப்பு எரித்து வருகின்றன.
மாசற்ற எரிபொருள்
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், எல்பிஜிக்கு வீடுகளை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு ஒரு முக்கியமான முடிவாகும். முதலாவதாக, எல்பிஜி ஒரு மாசற்ற தூய்மையான எரிபொருளாக உள்ளது, மேலும் மரபுசார்ந்த எரிபொருட்களால் வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் எரிவாயு உதவும். சமையலறை உட்புற மாசுபாடு பெண்கள் மற்றும் குழந்தைகளில் சுவாச நோய்களுக்கு முக்கிய காரணமாகும்.
400 சிகரெட்டுகளுக்கு சமம்
சமையலறையில் உள்ள இந்த பாரம்பரிய எரிபொருள்களில் சில தோராயமாக 400 சிகரெட்டுக்கு நிகரான புகையை உற்பத்தி செய்கிறது. அசுத்தமான எரிபொருட்களின் சுகாதார தாக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் மரணமடைகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. இதனால், எல்பிஜி சப்ளை விரிவடைந்தால் நாடெங்கிலும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் உதவ முடியும்
பெண்களுக்கு மானியம்
உஜ்வலா திட்டத்தின்கீழ் காஸ், இணைப்புகளை பெண்கள் பெயரில் வழங்கப்படும். மானியத் தொகையை அவர்களின் கணக்குகளுக்கு மாற்றுவதால், பெண்களுக்கு நிதியுதவி அளிக்க உதவுகிறது. இந்த திட்டம் ஏற்கனவே நாட்டில் 694 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதுவரை 2.2 கோடி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் எல்பிஜிக்கான புதிய பயனாளர் பத்து சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கால்வாசி மக்களிடம் காஸ் இணைப்பு
சராசரியாக இப்போது, நாட்டில் 10 குடும்பங்களில் 7 க்கும் மேற்பட்டோரிடம் எல்பிஜி இணைப்பு உள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், 3.25 கோடி புதிய எல்பிஜி இணைப்புகள் (உஜ்வலா மற்றும் உஜ்ஜ்வலா எல்.ஜி.ஜி. இணைப்புகளை உள்ளடக்கியது) நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்பிஜி இணைப்புகளில் இது மிக அதிகமான வருடாந்திர அதிகரிப்பு ஆகும்.
நிதி ஒதுக்கீடு
உஜ்வலா திட்ட முன்னேற்றம், இதுவரை வரை, அரசாங்கம் நிர்ணயித்த இலக்குகளை விடவும் சிறப்பாக உள்ளது. இது மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் ராஜீவ் காந்தி கிராமின் LPG வித்ரான் யோஜனாவின் (RGGLPY) செயல்திறனை விடவும் இது நன்றாக இருக்கிறது.
RGGLPY க்கான நிதி முக்கியமாக, எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் CSR நிதியில் இருந்து வந்தது. ஆனால் உஜ்வலா திட்டத்திற்கு 8000 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
மானியம் சரண்டர்
நாடு முழுவதும், 1.05 கோடி எல்பிஜி நுகர்வோர் அரசாங்கத்தின் அழைப்பிற்கு செவிமடுத்து தானாகவே மானியத்தை விட்டுக்கொடுக்கும் ஊக்கப் பிரச்சாரத்தின் கீழ் எல்பிஜி மானியத்தை வழங்கியுள்ளனர். இது அரசாங்கத்தின் மானிய சுமையை குறைத்தது. உஜ்வலாவின் முதல் நிதி ஆண்டில் முன்னேற்றம் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
கண்காணிப்பு அவசியம்
ஆனால், இந்த வேகத்தை பராமரிப்பதற்கு அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க திட்டங்கள் விரிவாக்கப்படுகையில், புதிய பயனாளர்களை சேர்ப்பது மிகவும் கடினம். உஜ்வலா திட்டத்தின் உண்மையான வெற்றி, புதிய இணைப்பு வைத்திருப்பவர்கள் எல்.ஜி.ஜி பயன்படுத்துவதைத் தொடர்கிறார்களா என்பதை உறுதி செய்வதில் உள்ளது.
மலிவு விலையில் சிலிண்டர் தேவை
எல்பிஜி கிடைக்கும் போதிலும் பாரம்பரியமான எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் விரும்புவதை நினைவில் கொள்ள வேண்டும். இது மலிவாக இருப்பது காரணமாக இருக்கலாம். எனவே, எல்.ஜி.ஜி. சிலிண்டர்கள் மக்களுக்கு மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி கணக்குகள் இருந்து மானியம் தொகை கிடைக்க முடியவில்லை என்றால் உஜ்வலா திட்டத்திலிருந்து குடும்பங்கள் வெளியேற கூடும்.