கோவா: ஆளுநரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - ஆட்சியமைக்க உரிமை கோரினர்
கோவாவில் உச்சக்கட்ட பரபரப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தனர்.
பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமைகோரி இன்று முதல்வராக மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா சட்டசபைக்கு மொத்தமுள்ள 40 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் முடிவு வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆளுங்கட்சியாக இருந்த பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஏனைய இடங்களில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
13 இடங்களைப் பெற்றுள்ள பாஜக சார்பில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர், திடீரென மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்து, தன்னையே ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆளுநர் முடிவு
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தனிப்பெரும் கட்சி எதுவோ, அந்தக் கட்சி ஆட்சியமைப்பதற்கே ஆளுநர் முதலில் அழைப்பு விடுக்க வேண்டும். இதன்படி 17 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரசுக்குத்தான் ஆளுநர் முதலில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 இடங்களைப் பெற்ற பாஜக சார்பில் மனோகர் பாரிக்கரை முதல்வராக நியமனம் செய்து ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டார்.
15 நாட்களில் பெரும்பான்மை
இதுதொடர்பான கடிதத்தை மனோகர் பாரிக்கருக்கு அனுப்பிய, ஆளுநரின் செயலாளர் ரூபேஷ் குமார் தாகூர், பாரிக்கர் தனக்கான பெரும்பான்மை பலத்தை 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
மனோகர் பாரிக்கர் முதல்வர்
இதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதல்வராக பதவியேற்பதை அடுத்து, தான் இதுவரை வகித்து வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கடும் கண்டனம்
மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். முறைப்படி காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதே ஜனநாயகம் என்றும், மக்களின் முடிவை ஆளுநர் புறந்தள்ளி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் இந்த நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்றும் கருத்து தெரிவித்துள்ள திக் விஜய்சிங், குதிரை பேரத்தின் மூலமே மனோகர் பாரிக்கர் இதர கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் சக்தியை பண சக்தி வெற்றிக்கொள்வதே கோவாவில் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்
காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘தேர்தலில் அதிக இடங்களை பிடித்து முதலிடத்தில் உள்ள காங்கிரசுக்குத்தான் நீங்கள் முதலில் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அரசியல் சாசன விதிமுறைகளின்படி, தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு வாய்ப்பு தராதது தவறு. காங்கிரஸ் ஆட்சியமைக்க உத்தரவிட்டு, பலத்தை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாஜவை ஆட்சியமைக்க நீங்கள் அழைத்துள்ளதாகவும், 14ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்றும் ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. இது முழுக்க, முழுக்க அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிரானது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
மனோகர் பாரிக்கருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இது அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க தடையில்லை எனறு கூறிய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது.
ஆளுநரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் கோவா ஆளுநர் மிருதுளாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். திக்விஜய்சிங் தலைமையில் கோவா ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர். அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.