ஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை ஆகியவற்றின் வாக்குகளைச் சேர்த்து அவருக்கு மொத்தம் 5,37,683 வாக்குகள் கிடைக்கும். எனினும், வெற்றியை உறுதி செய்ய அவருக்கு கூடுதலாக 12,000 வாக்குகள் தேவை என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
ராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதி
இதனால் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதுதவிர சமாஜவாடி கட்சியில் முலாயம் சிங் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மீரா குமார் வெற்றிக்கு போதிய வாக்குகள் இல்லை
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு, இடதுசாரிக் கட்சிகள், திமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. எனினும், அவரின் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற முடியாது என்பதே இப்போது வரைக்கும் உள்ள சூழலாக இருக்கிறது.
Recommended Video
காங்கிரஸ் அப்செட்
இருந்தபோதிலும் கடைசி நேரம் வரை பிராந்தியக் கட்சிகளின்ஆதரவைத் திரட்டும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருந்தது. ஆனால் அதில் பெரிய அளவுக்கான முன்னேற்றம் இல்லையென்பதால் காங்கிரஸ் தலைமை அப்செட் ஆகியுள்ளது.
மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பு
நாடு முழுவதும் தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குப் பதிவு மையம், மாநில சட்ட சபைகளில் ஒரு வாக்குப்பதிவு மையம் என மொத்தம் 32 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 33 கண்காணிப்பாளர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
20ம் தேதி தேர்தல் முடிவு
ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு என்பது 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்கள் சார்ந்த மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூலை மாதம் 20 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.