சன் டிவி எஃப்.எம்.களுக்கு உள்துறை அனுமதி மறுப்பு!: ஏன் என்று கேள்வி எழுப்பும் 'நிதி' அருண் ஜேட்லி!
டெல்லி: சன் டி.வி.யின் சூரியன் எஃப்.எம். உட்பட 50க்கும் மேற்பட்ட பண்பலை ரேடியோக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அதே நேரத்தில் சன் குழும ரேடியோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கடிதம் எழுதியுள்ளதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்புடைய விவகாரத்தில் சன் டிவி குழும அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ளன.
இவ்வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறியதற்கு கைமாறாக கலாநிதி நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி, தயாநிதி மாறன், அவர்களின் குடும்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துகளில் வழக்குடன் தொடர்புடைய ரூ.742 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்த நிலையில் சன் டிவி குழும நிறுவனங்கள் சார்பில் பண்பலை வானொலி சேவையைப் புதுப்பிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சன் டி.வி. சார்பில் தமிழகத்தில் சூரியன் எஃப்.எம். என்ற பெயரிலும் இதர மாநிலங்களில் ரெட் எஃப்.எம். என்ற பெயரில் உள்ளூர் மொழிகளிலும் இந்த ரேடியோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் உள்துறை அமைச்சகம் இந்த பண்பலை ரேடியோக்களின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்துள்ளது. ஏனெனில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விதிகளின்படி பண்பலை வானொலி சேவைகளுக்கு உரிமம் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும் முன்பு, அதில் இடம் பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணி குறித்து மத்திய உள்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். இதேபோல, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிதி ஆதாரம், நிதிப் பின்புலம் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படும். இதில் திருப்திகரமான பதிலை உள்துறை அளித்தால் மட்டுமே விண்ணப்பங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
தற்போது சன் டி.வி குழுமத்தின் மீது வழக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கம் இருப்பதால் அதனடிப்படையில் உரிமத்தை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
சன் குழுமத்துக்காக அருண்ஜேட்லி கடிதம்
இதனிடையே இந்த விவகாரம் பற்றி மத்திய நிதியமைச்சரும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லியிடம் சன் குழும நிறுவனங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த மாதம் முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, மத்திய உள்துறையின் நடவடிக்கை பண்பலை வானொலி சேவையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேட்லி கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, "ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கையும், பண்பலை வானொலி சேவை உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் குழும நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலித்து உரிய பதிலை அனுப்பி வைக்க வேண்டும்' என்று அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்கவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா உறுதிப்படுத்திய போதும் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.