வைகுண்ட ஏகாதசி விழா: புத்தாண்டு அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என கோவில் நிவாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஜனவரி 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. 2-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவில் மூலவர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகிறது. அதேபோல், உற்சவ மூர்த்திகளானஅருள்மிகு.தேவி, பூதேவி சமேத மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்டு, உள்பிரகாரத்தில் வலம் வந்து கோவிலின் தங்க வாசலில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் நடுத்தர மற்றும் சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2-ந்தேதி துவாதசி அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சொர்க்க வாசல் மூடப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக, கோவில் வளாகத்திலும் ,கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையொட்டி கோவில் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.