டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய கறுப்பு ஆடு யார்? துரத்தும் கேள்வி
தேர்தல் ஆணையத்திலுள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டிருக்கும் செயலை எளிதில் கடந்து செல்ல முடியாது என்பதால், கறுப்பு ஆடுகளை வெளிக்கொண்டுவர வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெற்றுத்தருவதற்காக அக்கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரிடம் ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தினகரன்தான் தனக்கு பணம் கொடுத்து தேர்தல் ஆணையத்தில் வழங்க கூறியதாக சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரகர்
இதில்ல சுகேஷ் சந்திரா என்ற தொழிலதிபர் இடைத் தரகராக மட்டுமே செயல்பட்டுள்ளார். அவர் பணத்தை வாங்கி, தேர்தல் ஆணையத்திலுள்ள கறுப்பு ஆட்டிடம் வழங்கவே திட்டமிட்டுள்ளார்.
ரூ.60 கோடி
சுகேஷ் சந்திராவின் வாக்குமூலம் அடிப்படையில் பார்த்தால், மொத்தம் அறுபது கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திலுள்ள சிலருக்கு வழங்கப்படுவதாக இருந்ததாம். இதை கைமாற்றிவிடும் புரோக்கர் போல சுகேஷ் சந்திரா செயல்பட்டுள்ளார்.
யார் அந்த கறுப்பு ஆடு
இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்பது, சுகேஷ் சந்திரா, தேர்தல் ஆணையத்தில் யாருக்கு இந்த பணத்தை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்பதுதான். தேர்தல் ஆணையத்தில் பணம் வாங்க அதிகாரிகள் உள்ளனரா, அப்படியானால் அந்த கறுப்பு ஆடு யார் என்பது குறித்து நாட்டுக்கு தெரிய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்த வழக்கு இன்னும் வலுவானதாக மாறும். அல்லது காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று இதை எளிதாக டிடிவி தினகரன் அணி கூறிவிட்டு கடந்து சென்றுவிட முடியும்.
பல்வேறு முக்கிய முடிவுகள்
இவ்வாறு கறுப்பு ஆடுகளை கண்டுபிடிப்பது மிகுந்த அவசியமாகும். சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது சைக்கிள் சின்னத்தை எந்த அணிக்கு ஒதுகுவது என்பது உட்பட பல முக்கிய முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அப்படியானால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுகளுக்கு பின்னணியிலும் கறுப்பு ஆடுகள் இருந்தனவா என்பதை அறிய தினகரனிடம் லஞ்சம் பெற முற்பட்ட அதிகாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது கட்டாயமாகும்.
ஜனநாயகத்திற்கே ஆபத்து
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். இந்த ஜனநாயகத்துக்கு அடிப்படை மக்கள் விரும்பும் அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான். அந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்திலுள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டிருக்கும் செயலை எளிதில் கடந்து செல்ல முடியாது என்பதால், கறுப்பு ஆடுகளை வெளிக்கொண்டுவர வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.