பாக்., சீனாவை எதிர்க்க இந்தியாவில் ரகசியமாக உருவாகிறது அணு ஆயுத நகரம்! அமெரிக்க பத்திரிகை அலறல்
வாஷிங்டன்: இந்தியா ரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்க பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, 'ஃபாரின் பாலிசி' என்ற அமெரிக்க முன்னணி பத்திரிகை வெளியிட்ட செய்தி: கர்நாடக மாநிலம், செல்லகெரே என்ற நகரின் அருகில் இந்தியா அணு ஆயுத நகரத்தை உருவாக்கி வருகிறது. 2017ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும்.
இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ மையமாக உருவாக்கப்பட்டுவருவதாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்கள், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சேமித்து வைக்கும் இடமாகவும் விளங்கும்.
இந்த நகரில் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரோனியம் சேமித்து வைக்கப்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த நகரம் பெரும் சவாலாக இருக்கும். இவ்வாறு அந்த பத்திரிகை கூறியுள்ளது.
இந்தியா அல்லது அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த எந்த ஒரு அதிகாரியின் பெயரையும் இந்த செய்தியில் உறுதி செய்யவில்லை என்றாலும், இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன், லண்டன் நகரங்களை சேர்ந்த ராணுவ நிபுணர்கள் இத்தகவலை கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஈடாக சுமார் 120 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், சீனாவிடம் சுமார் 200 ஆயுதங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் வட்டாரங்களிடம் கேட்டபோது, அணு ஆயுத நகரம் பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்டது. இது மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கிடையாது என்பதால், அறிவித்துவிட்டு செய்ய வேண்டியதில்லை என்றும், ராணுவ விவகாரம் என்பதால், தேவைப்படும் நடவடிக்கைகள், அறிவிப்பின்றியே நடைபெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
செல்லக்கெரே நகரம், சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகா தலைநகரமாகும். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் ஆந்திராவை ஒட்டிய நகரம் செல்லக்கெரே என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, செல்லக்கெரே அணு நகரத்திற்கு சப்போர்ட்டாக மைசூர் அருகே மற்றொரு ராணுவ மையம் உருவாக்கப்படுவதாக கர்நாடக செய்தி நிறுவனங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.