“தயவு செய்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” – விமானிகளுக்கு துருக்கி நிறுவனம் வேண்டுகோள்
அங்காரா: விமானியின் உளவியல் பிரச்சனை காரணமாக ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து நடந்ததை தொடர்ந்து கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் படி விமானிகளுக்கு துருக்கி விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அந்த விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி "ஜெர்மன்விங்ஸ் விமானி லுபிட்சை அவரது காதலி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட உளவியல் சிக்களால் தான் அவர் விமானத்தை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
எனவே விமானிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் விமானிகளை விரைவில் திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இதனைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் விமானிகளின் உளவியல் நலம் தொடர்பான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.