தொடர்ந்து பலம் பெறும் ஓபிஎஸ்.. வீட்டிற்கு சென்று நடிகை கவுதமி ஆதரவு
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டிற்கு கவுதமி இன்று காலை சென்று ஆதரவு தெரிவித்தார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து பெருகி வரும் நிலையில், நடிகை கவுதமி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
ஓபிஎஸ் மெரினாவிற்கு சென்று சசிகலா குறித்து குற்றச்சாட்டை நேரடியாக வைத்த பின்னர், சசிகலாவிற்கு எதிரானவர்கள், அவரது தலைமையை ஏற்காதவர்கள் என அனைவரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், பொன்னையன் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு நாள் தோறும் பெருகி வருகிறது. நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
கவுதமியின் ஆதரவு
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நடிகை கவுதமி நேரில் வந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார் கவுதமி. பின்னர், அங்கிருந்து புறப்பட்டார்.
திடீர் ‘அம்மா’ பாசம்
திடீரென ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து பேசி வந்த இவர் இன்று திடீரென ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
கட்சி சாராதவர்
இதுவரை அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். நடிகை கவுதமி ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தன் மூலம் கட்சியில் இல்லாத ஒரு பிரபலம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 2 அமைச்சர்கள்
இந்நிலையில், இன்னும் 2 அமைச்சர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்கு செல்லவிருப்பதால் அவரது அணி மேலும் பலவீனம் அடைந்து ஓபிஎஸ் அணி மேலும் பலம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.