ஸ்டாலினை தொடர்ந்து சந்திக்கும் கருணாஸ் அணி.. விரைவில் திமுகவில் ஐக்கியம்?
ஸ்டாலினை தொடர்ந்து சந்திக்கும் கருணாஸ் அணி விரைவில் திமுகவுக்கு மாறக் கூடும் என்றே தெரிகிறது.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு ஆகியோர் 3-வது முறையாக இன்று சந்தித்து பேசினர். அனேகமாக அடுத்த சந்திப்பின் போது திமுகவிலேயே கருணாஸ் உள்ளிட்டோர் ஐக்கியமாகிவிடவும் சாத்தியம் இருக்கிறது.
தினகரன் கோஷ்டியில் இருந்த கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் எடப்பாடி அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். மாட்டிறைச்சிக்கு தடை விவகாரத்தில் இந்த மூவரணி சட்டசபையில் வெளிநடப்பு செய்தது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் மூவர் அணியில் இருந்த தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாக அறிவித்தார். இதனிடையே திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை அடிக்கடி கருணாஸும் சட்டசபை வளாகத்தில் சந்தித்து பேசினர்.
ஏழு தமிழர் விவகாரமாம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தோம் என தொடர்ந்து கூறி வருகிறார் கருணாஸ். இந்த நிலையில் 3-வது முறையாக கருணாஸும் தனியரசும் இன்று சந்தித்து பேசினர்.
மீண்டும் சந்திப்பு
ஆளும் அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்கள்தான் கருணாஸும் தனியரசும். ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்தும் வலியுறுத்த முடியும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை கருணாஸ் தொடர்ந்து சந்திப்பதும் ஏழு தமிழர் பிரச்சனைக்காக மட்டுமே சந்திப்பதாக கூறுவதும் ஆச்சரியமாக இருக்கிறது.
விரைவில் ஐக்கியம்
இப்போது புதியதாக முரசொலி பவளவிழாவில் பங்கேற்க அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக 'அடித்து' விடுகின்றனர். அனேகமாக அடுத்தடுத்த சந்திப்புகளில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திமுகவிலேயே ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான் என்பதுதான் கோட்டை வட்டார ஹைலைட் பேச்சு.