ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா சட்டப்படி செல்லாது: எச்.ராஜா பேட்டி
என்னுடைய சட்ட அறிவுப்படி முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா செல்லதக்கது அல்ல என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது: தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காண கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த டிச.5-ல் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, தாமதமின்றி முதல்வர் பதவி பிரமானம் நடந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று, தியானம் செய்துவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்த தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய 2 மணி நேரமாக மறுத்த பிறகும், கட்டாயப்படுத்தப்பட்டதால் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல.
இந்த அசாதாரண சூழலில் சசிகலாவின் தேர்வும் ஏற்க முடியாது. தமிழக ஆளுநர் நன்கு சட்டம் பயின்றவர், தீர்க்கமான முடிவை எடுப்பார். முதல்வரையே நிர்பந்தப்படித்தியவர்கள், எம்எல்ஏக்களை எப்படி நெருக்கடியில்லாமல் வைத்திருப்பர் என்றார்.