ராமநாதபுரம்: பள்ளிகளை மூடவைத்த வெடிகுண்டு மிரட்டல்
ராமநாதபுரம்: கீழக்கரையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை நகரசபை பெண் தலைவரான ரட்டியா துல் கத்தாரியா என்பவருக்கு இன்று காலை ஒரு மர்மக் கடிதம் வந்தது.
அவரது கணவர் அதை பிரித்து, படித்துப் பார்த்தபோது, கீழக்கரை பகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக இன்று காலை 11.18 மணிக்கு அந்த குண்டுகள் வெடித்துச் சிதறும் என்றும், முடிந்தால் அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கீழக்கரை பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு அத்தனை பள்ளிகளையும் முழுமையாக சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து எந்த பள்ளியிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்ததை மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.