குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முன்கூட்டியே சொன்ன மருத்துவமனைக்கு “சீல்”!
நத்தம்: திண்டுக்கல்லில் குழந்தையின் பாலினத்தை முன்னரே ஸ்கேன் மூலம் தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே நத்தம் அவுட்டரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளை கண்டறியும் ஸ்கேன் பிரிவு செயல்பட்டு வந்தது. இதில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை பார்த்து கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட சட்ட அமலாக்க பிரிவு இணை இயக்குநர் ரவிகலா மேற்பார்வையில் அந்த மருத்துவமனையை சோதனையிடப்பட்டது.
அப்போது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கும் தனி அறை இருப்பது கண்டறியப்பட்டு அந்த அறைக்கு தாசில்தார் கேசவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்ளிட்ட போலீசார்கள் அங்கு நோயாளிகளுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலமாக சொல்வது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.