ரூ 55 லட்சம் வாடகை பாக்கி.. செட்டில் செய்யாத சசி குரூப்.. கதறும் கோல்டன் பே ஓனர்கள்!
கோல்டன் பே ரிசார்ட்டில் 10 நாட்கள் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கியதற்கு வாடகை ரூ. 60 லட்சத்தில் 5 லட்சம் ரூபாய் மட்டுமே செட்டில் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இதற்கு வாடகை மட்டுமே ரூ. 60 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அட்வான்ஸ் கொடுத்த 5 லட்சம் தவிர பாக்கி தொகையை சசிகலா குரூப் செட்டில் செய்யவில்லை என்று கோல்டன் பே ரிசார்ட் உரிமையாளர்கள் கவலையுடன் கூறியுள்ளனர். இதனை முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் தியானம் இருந்து விட்டு சசிகலாவிற்கு எதிராக பேட்டி அளித்தார். தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். 11 எம்பிக்கள் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.
எம்எல்ஏக்கள் அடைப்பு
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்தது. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் சென்று விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்களை சொகுசுப் பேருந்தில் அழைத்துச் சென்று கல்பாக்கம் அருகில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்தனர்.
வாடகை பாக்கி
கோல்டன் பே ரிசார்ட் தீவு போன்றது. சகல வசதிகளும் கொண்ட இந்த ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். அசைவ உணவு, மது விருந்து என தினசரியும் கவனிப்பு களை கட்டியது. எம்எல்ஏக்களை தங்க வைக்க அட்வான்ஸ் ஆக ரூ. 5 லட்சம் அளிக்கப்பட்டதாம்.
ரிசார்ட் மூடல்
பிப்ரவரி 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது ரிசார்ட்டில் இருந்து அனைவரும் நேராக சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து ரிசார்ட்டை பராமரிப்பு பணிக்காக மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது.
மதிப்பு குறைந்து விட்டது
ஆனால் எம்எல்ஏக்கள் தங்கியதால் ரிசார்ட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கூகுள் மதிப்பில் 4:2 என்ற அளவில் இருந்த மதிப்பு இப்போது 1:2 ஆக குறைந்து விட்டதாக கூறுகின்றனர். வாடகையும் தரவில்லை, சுற்றுலா பயணிகள் மத்தியில் மதிப்பும் குறைந்து விட்டது என்பது ரிசார்ட் உரிமையாளர்களின் கவலையாக உள்ளது.