திமுக- காங். கூட்டணியில் பிளவுபடுத்த மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: திமுக- காங். கூட்டணியில் பிளவுபடுத்தி தேசிய அளவில் திமுகவை தனிமைப்படுத்தவும் தமிழகத்தில் காங்கிரஸை பலவீனப்படுத்தவும் மத்திய உளவுத்துறை இறங்கியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை விவரம்:
கேள்வி :- தி.மு. கழகக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவிகிதத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்களே?
பதில் :- காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட மொத்தம் 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; அதுவே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கக் காரணமாகி விட்டது; எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தி.மு.க.வுக்குப் பேரிழப்பாக முடிந்து விடுகிறது - என்று தி.மு. கழகச் செயல்வீரர்கள் விவாதித்துக் கவலை கொண்டிருப்பதாக, ஒரு சில நாளேடுகளும் ஊடகங்களும் கருத்து தெரிவித்து, கலக விதை ஊன்றி வருகின்றன.
ஊடகங்கள் சில...
அந்தச் சில நாளேடுகளும், ஊடகங்களும் எவை என்று அவற்றின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், அவை எல்லா சந்தர்ப்பங்களிலும் தி.மு.க.வை இழித்தும் பழித்தும் அ.தி.மு.க.வை வலிந்து அரவணைத்தும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்து; மெதுவாக நஞ்சு செலுத்துபவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சொன்னது இதுதான்
"தி இந்து" ஆங்கில நாளேட்டுக்கு நான் அளித்த பேட்டியில், "தி.மு.கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன; இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்ட ணிக் கட்சிகளை நான் சிறிதும் குறை கூற விரும்பவில்லை.
அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்" என்று நான் சொன்னதை மறைத்து, தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
மத்திய உளவுத்துறையும் இறங்கியுள்ளது
இந்தச் "சேவை"யில் மத்திய அரசின் உளவுத் துறையும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை ஆங்காங்கே ஊன்றி வருவதாகவும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நோக்கமெல்லாம், தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை உருவாக்கி, ஊதிப் பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட வேண்டும்;
பாஜக- அதிமுக உற்வு தொடர்ந்திட...
அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர இலாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பதுதான். இதனைத் தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகளும், கூட்டணிக் கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.