லிங்கா: ரஜினி ரசிகர்கள் பெயரால் அரங்கேற்றப்பட்ட பிளாக் டிக்கெட் வியாபார மோசடிகள்!
-இர தினகர்
லிங்கா வெளியான சில நாட்களிலிருந்தே அதன் வினியோகிஸ்தர்கள் சிலர் விதவிதமான பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுத்து வருவதோடு உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டனர்.
அடுத்ததாக மெகா பிச்சை போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை பற்றிய வெவ்வேறு பரிமாணங்களும் நடந்துள்ள மோசடிகளும் 'த்ரில்லர் படக் காட்சிகள்' போல் வந்து கொண்டே இருக்கின்றன!
ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரில் வினியோகிஸ்தரே அரங்கேற்றியுள்ள 'ப்ளாக் டிக்கெட்' வியாபாரத்தை, அதை அவருக்காக நடத்தியவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற பெயரில் அறிக்கை
நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் பெயரில் ஒரு அறிக்கையை திருநாவுக்கரசு , சுவாமி நாதன், கணேஷ் குமார் என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளனர். மன்ற பெயரைப் பார்த்தாலே இது 'டகால்டி வேலை' என்று தெரிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ரஜினி ரசிகர் மன்றமும் அவருடைய படப் பெயரோ அல்லது படத்தில் வரும் கேரட்க்டர் பெயரோ அடைமொழியுடனேயே இருக்கும். முதலாமவர் நகர பொருளாளர், இரண்டாமவர் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாமவர் உறுப்பினர் என்று கூட போட வில்லை. முக்கூட்டுச்சாலை, மதுக்கூர், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியையும் கொடுத்துள்ளனர். லிங்காவுக்கு எதிராக பிரச்சனை கிளப்பிய வினியோகிஸ்தர் சிங்காரவேலனின் சொந்த ஊர் தான் மதுக்கூர் என்பது குறிப்பிடத் தக்கது.
அறிக்கையில் கையெழுத்திட்ட திருநாவுக்கரசு என்பவரை இணையதளம் ஒன்று பேட்டி எடுத்து ஆடியோவை வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் சிங்கப்பூரில் பத்து வருடங்கள் இருந்துவிட்டு தற்போது தான் ஊர் திரும்பியுள்ளதாகவும், சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு பொருளாளராக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ப்ளாக் டிக்கெட் வியாபாரம்
அவரும் மற்ற இரு நண்பர்களும் ஆளுக்கு தலா முன்று லட்சம் போட்டு, 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு அன்னபூர்ணா மற்றும் அருண் தியேட்டர்களில் ஒரு நாளைக்குரிய நான்கு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். முதலாம் தியேட்டரில் 550 இருக்கைகள் என்று அவரே கூறியுள்ளார். கிட்டதட்ட ருபாய் 170 வீதம் 4600 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். அதை சாதாரண வகுப்பிற்கு 200 ரூபாய்க்கும், பாக்ஸ் வகுப்பிற்கு 250க்கு விலை நிர்ணயம் செய்து விற்றுள்ளார்கள். அவர்கள் பாஷையில் மழுப்பலாக ‘டிக்கெட் எடுத்து செய்யலாம்' என்று கூறியுள்ளார். எடுத்து செய்வது என்பது ப்ளாக் டிக்கெட்டில் விற்கலாம் என்பதே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது தியேட்டருக்கு வரும் அனைவரும் இவர்களிடம் மட்டுமே 200 விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளார்கள். அப்படியென்றால் தியேட்டர் கவுண்டரில் விற்கப்படவில்லையா? தியேட்டர் உரிமையாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வியும் எழுகின்றன. சட்டப்படி இது குற்றமும் கூட.
மன்றத்தின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர், கடன் வாங்கி மொத்தமாக டிக்கெட்டுகள் வாங்கி விற்று விட்டு நஷ்டக் கணக்கு காண்பிக்கிறார்.
ரசிகர் மன்ற நிர்வாகியாக இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ள நபர், அவர் கையெழுத்துடன் வெளியான அறிக்கையில் 'மன்ற நிதி திரட்டுவதற்காக டிக்கெட் வாங்கி விற்றேன்' என்று கூறியுள்ளார். அப்போ நிர்வாகிகள் யார் ? அவர்களுக்கு இதற்கும் தொடர்பு என்ன? அல்லது மன்றத்தின் பேரில் மோசடியா? போன்ற கேள்விகள் எழுகின்றன. மதுக்கூரில் இப்படி ஒரு ஒரு ரசிகர் மன்றம் இருக்கிறதா என்று மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மன்றத்தின் பெயரில் மோசடி நடந்திருந்தால் காவல் துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே!
அறிக்கையின் கடைசி பக்கத்தில் கையால் எழுதியுள்ள பெயர்களைப் பார்க்கும் போது ஒருவரே அனைத்து பெயர்களையும் எழுதியுள்ளது போல் தெரிகிறது. பத்துவருடங்களாக வெளி நாட்டில் இருந்தேன், பொருளாளர் பதவியில் இல்லை என்று கூறுகிறார். ஆனால் நகர பொருளாளர் என்று கையெழுத்திட்டுள்ளார். பொய்யான தகவலை வெளியிட்டதினால், இது சட்டப்படி குற்றமாகாதா?. அறிக்கையை முழுவதும் படித்து பார்த்து தான் கையெழுத்திட்டார்களா அல்லது கையெழுத்திட்டால்தான் பணம் தருவோம் என்று மிரட்டி வாங்கினார்களா?
திரைப்பட வினியோகத்தில் நடைபெறும் அனைத்து தில்லுமுல்லுகளையும் கிட்டத்தட்ட வெளிக்கொணர்ந்திருக்கிறது லிங்கா. இதுவரை சாதாரண மக்களுக்கு தெரியாத பல விஷயங்கள் லிங்கா வந்த பிறகு தெரிய ஆரம்பித்துள்ளன.
மத்திய வருமான வரித்துறையும் நடக்கும் காட்சிகளை உன்னிப்பாக கவனித்து வந்தால் பெருமளவில் நடைபெறும் வருமான வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க முடியும்.
இப்போது லிங்கா பிரச்சினையில் சமரசப் பேச்சு என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. அப்படியானால் இதற்கு முடிவே இல்லையா... ஒரு பக்கம் மக்களிடம் கொள்ளை விலையில் டிக்கெட் விற்று வசூல் செய்து, மோசடியாகக் கணக்கு காட்டுவதும், பின்னர் அதே படம் நஷ்டம் என்று கூறி சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் பணம் கறப்பதும் தொடர்கதையாகப் போகிறதா?
குறிப்பு: கட்டுரையாளர் ரஜினி ரசிகர். ரசிகர்கள் சார்பில் அவர் எழுதியுள்ள விளக்க கட்டுரை இது.