பிரேம்ஜிக்காக கோவில் கோவிலாக போகிறேன்... கங்கை அமரன் உருக்கம்- Exclusive
நடிகர் பிரேம்ஜி மகாலஷ்மி போல் பெண் வேண்டும் என கூறியுள்ளதால், அப்படிப்பட்ட பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என பிரேம்ஜியின் அப்பா கங்கை அமரன் ஒன் ஒந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ள
சென்னை: பிரேம்ஜிக்கு மகாலஷ்மி போல் பெண் வேண்டும் என சொல்கிறார். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் அவருக்கு திருமணம் செய்துவிடுவோம் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
திரையுலக பிரபலமும் பாஜகவைச் சேர்ந்தவருமான கங்கை அமரன் ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் ஆர்கேநகர், தினகரன், மு.க.ஸ்டாலின் என பரபரப்பாக பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி உங்களுக்காக....
கேள்வி: கருணாநிதியின் வைர விழாவில் கலந்துகொள்வீர்களா?
பதில்: நல்ல கேள்வி. நான் கருணாநிதியின் வைரவிழாவில் பாட வேண்டும், வாழ்த்துப் பெற வேண்டும் என இரண்டு மூன்று முறை நானே போன் செய்து கேட்டேன். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவருடைய படங்களுக்கு நான் பாடல்கள் எழுதியுள்ளேன்.
அவர்கள் என்னை பாஜகவைச் சேர்ந்தவர் என்றுதான் பார்க்கிறார்கள். இசையமைப்பாளர், பாடகர் கங்கை அமரனாகப் பார்க்கவில்லை. இதில் எனக்கு மனவருத்தம் இருக்கிறது.
கேள்வி: உங்களுக்கும் இளையராஜாவுக்கும் உறவு எப்படி உள்ளது. எஸ்.பி.பி விஷயத்தில் நீங்கள் இளையராஜாவுக்கு எதிராக கருத்து கூறினீர்களே
பதில்: எஸ்.பி.பி விஷயத்தில் மீடியா என்னிடம் கருத்து கேட்டபோது நான் என் கருத்தை சொன்னேன் அவ்வளவுதான். நானே மீடியாவை கூப்பிட்டு அண்ணன் இளையராஜா குறித்து கருத்து சொல்லவில்லை. அவர்,'என் பாடல்களை இனி மேடையில் யாரும் பாடக்கூடாது' என்று சொன்னது அபசகுமனாகப் பட்டது. அதன்விளைவு இன்று இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடுவதற்கு பாடகர்கள் தயங்குகிறார்கள். அதனால் அவர் பாடல் இன்று மேடைகளில் ஒலிப்பதில்லை.
இளையராஜா செய்தது தவறு
பாடல்கள் யாருடையது என்று புரியவில்லை. அவர் இசையமைக்கிறார். அதற்குத்தான் நாங்கள் பாடல் எழுதுகிறோம். ட்யூன் அவருடையது. பாடல்வரிகள் பாடலாசிரியருடையது. ஒரு பாடலுக்கு தடை என்பது ஒரு பாடகனுடைய உரிமையையும் பாடலாசிரியன் உரிமையையும் தடுப்பதால், அப்போது நான் கருத்து சொன்னேன். என் பாடல்களை யாரும் பாட வேண்டாம் என்று சொன்னதால் மனோ, சித்ரா, எஸ்.பி.பி, யேசுதாஸ் உள்ளிட்ட பாடகர்கள் இவருடைய பாடல்களை மேடையில் பாடமுடியமால் இவரே தடை விதித்துவிட்டாரே என்கிற வருத்தம் தான்.
இளையராஜாவைத் திட்டுவேன்
எப்போதும் நான் அவரைப் பற்றி எதாவது திட்டிக்கொண்டேதான் இருப்பேன். அவர்,'அவனுக்கு வேற வேலையில்லை' என என்று என்னை சொல்வார். இருந்தாலும் எங்கள் அண்ணன் தம்பி உறவு சுமூகமாகத்தான் இருக்கிறது.
கேள்வி: அப்போதையை தமிழ் சினிமா எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?
பதில்: டெக்னிகலாக நிறைய வளர்ந்திருக்கிறது. நடிக்கத் தெரியாதவர்களைக் கூட நடிக்கத் தெரிந்தவர்கள் போல் காட்டுவதில் டெக்னிகலாக தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. ஆனால், கதையம்சத்திலும் இசையிலும் தமிழ் சினிமா இன்னும் வளரவில்லை என்பது என் கருத்து.
கேள்வி: உங்கள் காலத்தில் ஒரு சினிமா நிறைய நாள் ஓடியது. ஆனால் இப்போது ஒரு படம் நிறையநாட்கள் ஓடுவதில்லையே. அது ஏன்?
பதில்: முன்பு படங்கள் அளவாக வந்துகொண்டிருந்தன. அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் கூட நன்றாக ஓடின. ஆனால் இப்போது நிறைய படங்கள் வருகின்றன. மக்கள் எதை தேர்ந்தெடுப்பது என்று குழம்புகிறார்கள். நல்ல கதையுள்ள படங்களும் குறைவாகத்தான் வருகின்றன.
தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட வேண்டும்
ஆகையால் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இத்தனை படங்கள் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு வேண்டும். இன்று சின்னப் படங்கள் அதிகமாக ஓடுவதில்லை. பெரிய படங்களும் வசூலை எடுப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். ஆகையால் இங்கு சரியான திட்டமிடல் வேண்டும்.
கேள்வி: ஒரு குடும்பம் தியேட்டரில் போய் சினிமா பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது தேவைப்படுகிறது. இந்த நிலை நீடித்தால்...?
பதில்: இன்னும் கொஞ்சநாட்களில் படங்கள் நேரடியாக டிவியிலேயே வெளியாகும் காலகட்டம் வரும். முன்கூட்டியே இந்த படத்துக்கு இவ்வளவு என படம் கட்டிவிட்டால் அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் அந்த படம் ரிலிசாகும் நிலை ஏற்படும். முதல்நாள் முதல் ஷோ வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு நிலைமை மாறும்.
கேள்வி: நடிகர் சங்கத்தினர் சினிமா டிவி என ஒரு டிவி தொடங்க இருப்பதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நடிகர் சங்கத்தினரும் தயாரிப்பாளர் சங்கத்தினரும் இனி தியேட்டர் கட்டிவிட்டு, எங்கள் தியேட்டரில்தான் படம் ரிலீஸ் ஆகும் என்று கூட சொல்லலாமே. மக்கள் நடிகர்கள், நடிகர்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதில் எந்த டிவியில் பார்த்தால் என்ன?
நடிகர்கள், நடிகர் சங்கத்துக்கு மட்டும் சொந்தமா?
நடிகர்களும் நடிகைகளும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லமுடியுமா? நாங்கள் சொல்கிற கடை திறப்புவிழாவுக்குத்தான் போக வேண்டும். நாங்கள் தான் நடிக, நடிகையரை படம் பிடிப்போம் என்று சொல்லலாமா? இது பிற்காலத்தில் நிறைய பிரச்சனைகளைக் கொண்டு வரும். யோசித்து செய்ய வேண்டும்.
கேள்வி: ஸ்ட்ரைக் என்று சொன்னார்கள். பிறகு யாரும் ஒத்துழைக்கவில்லை,அதனால் ஸ்ட்ரைக் வாபஸ் என்கிறார்கள். நடிகர் சங்கத்தில் என்ன தான் நடக்கிறது?
பதில்: நடிகர் சங்கத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறோம் என்று சொல்லித்தானே ஆட்சியை மாற்றியமைத்தீர்கள்.பின்பும் பிரச்சனைகளை தீர்க்கவிட்டால், என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வி வருகிறதல்லவா?
அரசியல் வேண்டாம்
இதேபோல் தான் தயாரிப்பாளர் சங்கத்திலும் பிரச்சனையைத் தீர்க்கிறோம் என்று வந்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த சங்கங்களை அரசியல் கட்சி போல் ஆக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.
கேள்வி: சென்னை 28 திரைப்படத்தில் நடித்திருந்தீர்களே... அதுவும் பிரேம்ஜிக்கு அப்பாவாக. அதைப்பற்றி...
பதில்: ஒருநாள் என்னை கூப்பிட்டு, நீங்கள் ஒருநாள் நடிக்க வேண்டும். வெறும் இரண்டி சீன் தான் என்று சொன்னார்கள். நான் போனேன். இயக்குநர் வெங்கட்பிரபு சொல்லிக் கொடுத்ததை நான் சொன்னேன். அது நடிப்பாகிவிட்டது. ரொம்ப ஜாலியாக படம் இயக்குகிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நானும் கூடத்தான் இப்படித் தான் ஜாலியாக படம் எடுத்தேன்.
கேள்வி: இனியும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பீர்களா?
பதில்: ரொம்ப சந்தோஷமாக செய்வேன். கடைசிவரைக்கும் பாட்டு எழுதவும், நடிக்கவும் பாடவும் ஆசைப்படுகிறேன். ஆகையால் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன்.
கேள்வி: பிரேம்ஜிக்கு எப்போது திருமணம்?
பதில்: அய்யோ... எந்தப் பெண்ணைக் காண்பித்தாலும் பிடிக்கவில்லை என்கிறார். தழைய தழைய புடவை கட்டி, பொட்டு வைத்து, வெள்ளி, செவ்வாய் கோயிலுக்கு போகிற பெண் கேட்கிறார்.
பிரம்ஜீக்கு இந்த வருடம் திருமணம்
இப்போது உள்ள பெண்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையையே சரியாக கவனிப்பதில்லை. பிரேம்ஜி கேட்கும் பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்த வருஷத்துக்குள் அப்படியொரு பெண் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோயில் கோயிலாக போய்க்கொண்டு இருக்கிறேன்.
பந்தா இல்லாதவர்கள்
என் பிள்ளைகள் இருவருமே நல்லவர்கள். சந்தோஷமான பிள்ளைகள். நான் என்ன நினைக்கிறேன் என்பதை புரிந்துகொள்கிறவர்கள். எனக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காமல் நல்லவிதமாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார்கள். அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். சினிமாவில் எல்லாரிடமும் நல்ல பிள்ளைகள் என்று பெயெரெடுத்துள்ளார்கள். யாரிடமும் எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக உள்ளார்கள். இது எனக்கு நிறைவைத் தருகிறது.
கேள்வி: பிரேம்ஜி எதிர்காலத்தில் இசையமைப்பாளராக வருவாரா? நடிகராக வருவாரா?
பதில்: அவருக்கு இரண்டிலும் மிகுந்த இன்ட்ரஸ்ட் என்றாலும் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். விரைவில் ஒரு பெரிய படத்தில் அவர் இசையமைக்க உள்ள செய்தி வெளியாகும். அவர் ஜாதகத்திலேயே அவருக்கு இசையில் தான் உச்சத்தை தொடுவார் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் இசையில் பெரிய ஆளாக வருவார். - இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.