மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் அப்பா செய்வார்! - சௌந்தர்யா
அரசியல் விஷயத்தில் மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் அப்பா செய்வார் என்று ரஜினி மகள் சௌந்தர்யா தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், மீண்டும் தொடர்ந்து ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
ரஜினி கட்சி
ரசிகர்கள் சந்திப்பு முடிந்ததும் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சந்திப்புகள்
தற்போது ‘காலா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். பல பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
அரசியல்தான்
சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அரசியல் குறித்துப் பேசி வருவதாக ஒப்புக் கொண்டார். ஆகஸ்டு மாதம் ரசிகர்களைச் சந்தித்து பேசிய பிறகு அவர் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
சௌந்தர்யா
இந்த நிலையில் ரஜினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக மும்பையில் அவரது மகள் சௌந்தர்யா நிருபர்களிடம் பேசுகையில், "அப்பா எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார். அவர் எதைச் செய்தாலும் சரியான நேரத்தில் செய்வார்.
ஆதரவு
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்," என்றார்.