இரட்டை இலையை முடக்கியது சரிதான்.. தமிழிசை சந்தோஷப்பட காரணம் இதுதானாம்
இரட்டை இலை சின்னத்தை முடக்கியது சரிதான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழசையின் இந்த மகிழ்ச்சி நீண்ட நாளைக்கு நிலைக்காது என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஊரு ரெண்டு பட்டா பூசாரிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. பாஜகவிற்கு நன்றாகவே பொருந்தும்.
அதுவும் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுக இரண்டாக உடைபட்டு நிற்கும் போது எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்றி விட பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, மோடி என பாஜகவினர் அவரவர் பங்கிற்கு வேலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சசிகலா அணியில் உள்ள எம்பி அன்வர்ராஜா நேரடியாகவே நேற்று பாஜகவை குற்றம்சாட்டி பேசினார். குறிப்பாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது குறித்து கடுமையாக சாடிய அவர், பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் வழியாக பாஜக
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் துணையோடு பாஜக தமிழகத்தில் காலடி வைக்க முயலுக்கிறது என்றும் நேரடியாக குற்றம்சாட்டினார். அதனால்தான் ஜெயலலிதாவின் இறப்பின் போது சென்னையில் முகாமிட்டிருந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஓபிஎஸ்ஸை முதல்வராக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார் என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார் அன்வர்ராஜா.
தமிழிசையின் எக்காளம்
அதுகேற்படியே, இரட்டை இலை முடக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பாஜக தமிழிசை சூப்பராக பதில் சொல்லி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதை காட்டிவிட்டார். "எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. எனவே, சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவுதான். தேர்தலுக்கு பின் அதிமுகவே முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று தமிழிசை சொல்வதன் உள்ளகிடக்கு என்ன என்பது குழந்தைக்கு கூட புரியும்.
டெல்லி விளையாட்டு
முறையாக தேர்தல் நடைபெற்று, தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக மக்களைவிட டெல்லி பாஜகவினருக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி அல்லது பிளவை ஏற்படுத்தி தமிழகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
இயற்கையே இலையை முடக்கியதாம்..
இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது என்று கூச்சநாச்சம் இல்லாமல் தமிழிசை கூறியுள்ளார் என்று கூறிய அதிமுகவினர், இதுபோன்ற வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் தொடர்ந்து பாஜக இது போன்ற 3ம் தர வேலைகளில் ஈடுபடுவதால் அதற்குத்தான் நஷ்டம் என்றும் கூறினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர் என அனைத்தையும் முடக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்குதான்னு பார்ப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.