சென்னை, புதுவை, மங்களூருவில் லேசான நிலநடுக்கம்... மக்கள் பீதி!
சென்னை: டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம் சென்னை மற்றும் புதுச்சேரி நகரங்களும் லேசாக உணரப்பட்டது.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. டெல்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக சென்னையிலும் இன்று காலை 11.30 மணியளவில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். பாரிமுனை, கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மிக மிகச் சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் தி.நகரில் அலுவலகங்களில் வேலை செய்தவர்கள் உடனடியாக தங்களின் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். பொருட் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
புதுச்சேரியில் நிலநடுக்கம்
இதுபோல புதுச்சேரிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. காந்திவீதியில் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. கடைகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்த காரணத்தால் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
நேபாளத்திலும், வடமாநிலங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை, புதுச்சேரி வரை உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடுப்பி, மங்களூருவில்
இதேபோல் கர்நாடக மாநிலம் உடுப்பி, மங்களூருவில் இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் சேதம் எதுவுமில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.