எங்க கூட வருவது குறித்து கண்டிப்பாக விஜயகாந்த் பரிசீலிப்பார்.. வைகோ நம்பிக்கை
ஈரோடு: திமுகவைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால், தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைப்பதை பரிசீலிக்கும் என நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் தங்களது கூட்டணி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஏற்கனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது.
தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என மூன்று கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், தேமுதிக இன்னமும் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. வேட்பாளர் நேர்காணலின் போது அவர்களிடம் ஆலோசித்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது. அதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை தலைவர் சுப்பராயன் மற்றும் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது வைகோ பேசியதாவது:-
கூட்டணிக்கு அழைப்பு...
மக்கள் நல கூட்டணி சிறந்த கொள்கையுடன் மிகவும் சிறப்பாக இயங்குகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் எங்கள் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்தித்து 1 மணி நேரம் பேசினோம். எங்கள் கூட்டணிக்கு அவரை வருமாறு அழைப்பு விடுத்தோம். எங்கள் கூட்டணியுடன் கரம் கோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
மகிழ்ச்சி...
அதற்கு விஜயகாந்த் "தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளதே?" என்றார். மேலும் எங்களது அழைப்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
விமர்சனம்...
கூட்டணி குறித்து பல்வேறு ஆரூடங்கள் உலாவினாலும் தி.மு.க.-காங். கூட்டணி சேர்ந்தது பற்றி காஞ்சிபுரம் மாநாட்டு திடலை சுற்றி பார்க்க வந்த பிரேமலதா விஜயகாந்த், கடுமையாக விமர்சனம் செய்தார். இரண்டுமே "ஊழலில் ஊறிய கட்சி" என்றும் இணையதளம் மூலம் தெரிவித்தார்.
காஞ்சி மாநாடு...
மேலும் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் கூட அவர் அதனை மீண்டும் தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலம் தே.மு.தி.க. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காது என்று புலப்படுகிறது.
நம்பிக்கை...
இதனால், சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. எங்களுடன் கூட்டணி வைத்து கொள்ள பரிசீலிக்கும் என நம்புகிறேன். நாங்கள் ஆரம்பத்தில் விடுத்த வேண்டுகோளையும் பரிசீலிக்கும் என நம்புகிறேன். அதையே நாங்களும் விரும்புகிறோம்.
வாழ்த்து...
தே.மு.தி.க. மாநாட்டுக்கு நாங்கள் வாழ்த்து கூறி இருந்தோம். தமிழக அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் மலர்வதற்கு மாநாடு கட்டியம் கூறுவதாக வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தோம்.
கரம் கோர்ப்பார்...
எனவே விஜயகாந்த் அவர்கள் எங்கள் மக்கள் நல கூட்டணியுடன் கரம் கோர்ப்பார் என மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். நிச்சயம் அவர் எங்கள் பக்கம் வர வேண்டும். வருவார் என்று நம்புகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.