சிதறு தேங்காயாகும் அதிமுக...கூவத்தூர் கூத்து மீண்டும் அரங்கேறுமா?
அதிமுக அம்மா அணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் மீண்டும் கூவத்தூர் கூத்து அரங்கேறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக அம்மா அணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்துள்ளதால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவே மீண்டும் ஒரு கூவத்தூர் கூத்து அரங்கேறும் நிலை உருவாகியுள்ளது.
முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து தியானம் செய்தார். மறுதினம் கட்சி இரு அணிகளாக பிளவு பட்டது. சசிகலா அணிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 12 எம்எல்ஏக்கள் 10 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர்.
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கே எம்எல்ஏக்களுக்கு ராஜ உபசாரம் நடைபெற்றது. சசிகலாதான் முதல்வராக பதவியேற்பார் என்று காத்திருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தார் சசிகலா. எம்எல்எக்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
டிடிவி தினகரன்
சசிசலா சிறைக்கு செல்லும் முன்பாக கட்சியில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்பதற்காக துணை பொதுச்செயலாளர் பதவியில் டிடிவி தினகரனை நியமித்தார். அதில்தான் சிக்கல் உருவானது. கட்சியையும், ஆட்சியையும் தனது கண்ட்ரோலில் கொண்டு வந்தார் டிடிவி தினகரன்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல்
குல தெய்வம் கோவில் விபூதி பூசுவதில் தொடங்கி நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைப்பது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்தார் டிடிவி தினகரன். இங்கேதான் சிக்கல் உருவானது. ஒரு கட்டத்தில் முதல்வராகவும் ஆசைப்பட்டார் தினகரன்.
ஆர்.கே. நகரில் போட்டி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு களத்தில் குதித்தான் டிடிவி தினகரன். தனக்கு ஆதரவாக உள்ள தளவாய் சுந்தரத்தை ஆல் இன் ஆளாக நியமிக்கவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தக்க சமயத்திற்காக காத்திருந்தனர்.
இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் வசமாக சிக்கினார் டிடிவி தினகரன். ஏற்கனவே பெரா வழக்கு வேகமெடுத்த நிலையில் டிடிவி தினகரனுக்கு எதிராக கொதிப்பில் இருந்த கொங்கு மண்டல அமைச்சர்கள் நேரடியாகவே போர்க்கொடி உயர்த்தினர்.
ஒதுக்கி வைக்க முடிவு
கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்ற இரு அணிகளும் இணையும் முடிவு வந்தும் டிடிவி தினகரனால் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனையடுத்து அவரை ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தியும் அதை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார். கட்சியின் ஒற்றுமை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
தினகரன் அணி எம்எல்ஏக்கள்
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் ஜெயக்குமாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏக்கள் சாத்தூர் சுப்ரமணியன், ஆண்டிபட்டி தங்கத்தமிழ் செல்வன், பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தங்கள் பின்னால் 122 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால்தான் இருக்கிறார்கள்.
கூவத்தூர் கூத்து
டிடிவி தினகரன் அணியில் இப்போது வரை தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, சாத்தூர் சுப்ரமணியன் ஆகிய எம்எல்ஏக்கள் மட்டுமே தற்சமயம் உள்ளனர். எம்எல்ஏக்களை வசப்படுத்த கூவத்தூர் கூத்து மீண்டும் ஒருமுறை அரங்கேறினாலும் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கடந்த 5 மாதத்தில் தமிழகம் பல கூத்துக்களை பார்த்து விட்டது. இன்னும் எத்தனை கூத்துக்களை பார்க்கவேண்டியிருக்கிறதோ தெரியலையே?