யார் இந்த IPS அஜய் பால் சர்மா?.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ‘சிங்கம்’ அதிகாரியின் வார்னிங் வீடியோ வைரல்
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் சூழலில் 'சிங்கம்' என அழைக்கப்படும் IPS அதிகாரி அஜய் பால் சர்மா நியமனம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கை வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாநிலத்தில் தேர்தல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ளது. இதனால், மேற்கு வங்கத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்க மாநில தேர்தலை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த IPS அதிகாரி அஜய் பால் சர்மா தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வைரல் வீடியோ
திரிணமூல் காங்கிரஸ் (TMC) வேட்பாளர் ஜெஹாங்கீர் கானின் ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா ஜெஹாங்கீர் கான் ஆதரவாளர்களிடம் வாக்காளர்களை மிரட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் TMC மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த அஜய் பால் சர்மா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த அஜய் பால் சர்மா தற்போது உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" என்று அறியப்படும் இவர், ஷாம்லி, நோய்டா, ஜான்பூர், ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல முக்கிய குற்றவியல் நடவடிக்கைகளை கையாண்டவர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றமற்ற உத்தரப் பிரதேசத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இடம்பெற்ற பல என்கவுண்டர் சம்பவங்களிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்
2018 ஆம் ஆண்டு ராம்பூரில் பணியாற்றிய போது, 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது நடந்த என்கவுண்டர் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். அந்த சம்பவத்தில் குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் முக்கிய இடங்களை நேரில் பார்வையிட்டு, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவரது நடவடிக்கைகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications