அட்ரஸ் இல்லாமல் போன காங்., ஆம் ஆத்மி.. ஒரு இடத்தில் கூட ஜெயிக்கல! குஜராத்தில் மீண்டும் மோடி மேஜிக்
காந்திநகர்: குஜராத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குஜராத்தில் கம்பேக் கொடுக்க நினைக்கும் காங்கிரஸுக்கும், வளர நினைக்கும் ஆம் ஆத்மிக்கும் இது மிகப் பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
குஜராத் என்பது பாஜகவின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு 1998 முதலே பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. அதன் பிறகு அங்கு பாஜகவை வீழ்த்த காங்கிரஸால் முடியவே இல்லை. சட்டசபைத் தேர்தலில் மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
குஜராத் மாநிலத்தின் மாநகராட்சிகள் முதல் நகராட்சிகள் வரை நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பாஜக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. அங்குக் காங்கிரஸின் நிலை கவலைக்கிடம் என்றால், கடந்த முறை அதிரடி காட்டிய ஆம் ஆத்மியும் இப்போது அட்ரஸ் இல்லாமல் போயிருக்கிறது.
இன்றைய தினம் தான் அங்கு மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தபடியே, நகர்ப்புற குஜராத்தில் பாஜக தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவுக்குப் பெரிய சவாலை அளிக்க முடியாமல் திணறியுள்ளன.
மிகப் பெரிய வெற்றி
மாநிலத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகளில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குஜராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் 192 இடங்களில் பாஜக 158 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 22 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதேபோல சூரத்திலும் இந்த முறை பாஜகவுக்கே பெரிய வெற்றி. கடந்த முறை சூரத்தில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி கொடுத்த ஆம் ஆத்மி, இந்த முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 120 இடங்களில் பாஜக 115ஐ வெல்லவே, ஆம் ஆத்மி வெறும் 4 இடங்களோடு சுருங்கியது. காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது.
அதேபோல குஜராத்தின் மற்ற முக்கிய நகரங்களான ராஜ்கோட் மற்றும் வதோதராவிலும் இந்த முறை பாஜக தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராஜ்கோட்டில் 72 இடங்களில் 65ஐ பாஜக வென்றுள்ள நிலையில், வதோதராவில் 76 இடங்களில் 69ஐ பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. பாவ்நகரிலும் 52 இடங்களில் 44 இடங்கள் பாஜக வசம் சென்றன.
கிளீன் ஸ்வீப்
சில குறிப்பிட்ட நகராட்சிகளில் எதிர்க்கட்சிகளால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை.. போர்பந்தர் மற்றும் மோர்பியில் மொத்தம் தலா 52 இடங்கள் உள்ளன. இந்த இரண்டு நகராட்சிகளிலும் பா.ஜ.க அனைத்து இடங்களையும் வென்றுள்ளது. அதேபோல நாடியாட் மற்றும் சுரேந்திரநகர் இரண்டிலுமே தலா 51 இடங்களை பாஜக வெல்ல, காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. நவ்சாரியில் 52 இடங்களில் 50ல் பாஜக வெற்றி பெற்றது. இப்படி பாஜக மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.
மாநகராட்சிகளைத் தாண்டி, மற்ற அமைப்புகளிலும் கூட பாஜகவே முன்னிலை வகிக்கிறது. அங்கு 84 நகராட்சிகளில் மொத்தமுள்ள 2,030 இடங்களில் பாஜக 1,791 இடங்களை வென்றது. காங்கிரஸ் 414 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை 34 மாவட்ட பஞ்சாயத்துகளில் 568 இடங்களை பாஜக வென்றுள்ளது. 260 தாலுகா பஞ்சாயத்துகளில் 2,397 இடங்கள் பாஜக வசம் சென்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?
இந்தத் தேர்தல் முடிவுகள் குஜராத் காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பல இடங்களில் அக்கட்சி ஒற்றை இலக்கத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், சூரத்தைத் தாண்டி மாநிலம் முழுவதும் காலூன்ற நினைத்த ஆம் ஆத்மிக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தையே தந்துள்ளன. பாஜகவின் வலுவான வாக்கு வங்கியும், அக்கட்சியின் தேர்தல் பணிகளும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்களைத் தக்கவைக்க உதவியுள்ளன. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதும் பாஜகவின் இந்த இமாலய வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.














Click it and Unblock the Notifications