200 ஆண்டுகள் வாழும் "திமிங்கில" ரகசியம்! மனித ஆயுளை நீட்டிக்கும் சூப்பர் புரதம் கண்டுபிடிப்பு!
லண்டன்: மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை நீடிக்க உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி நடந்த ஒரு ஆய்வில் தான் திமிங்கிலத்தில் உள்ள ஒருவித புரதம் மனிதர்களின் ஆயுளை நீடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் இது பாசிட்டிவான முடிவைக் கொடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது குறித்து ஆய்வுகள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இப்போது உலகில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 73.8ஆக இருக்கிறது.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இது இன்னும் கூட அதிகமாகவே இருக்கிறது. அந்த நாடுகளில் பொதுமக்களில் பலர் 100 வயதைத் தாண்டியும் வாழ்கிறார்கள். மனிதர்கள் உயிர் வாழும் காலத்தை அதிகரிக்க உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் சமீப காலங்களில் முக்கிய முன்னேற்றங்களும் நடந்து வருகிறது.

திமிங்கில புரதம்
இதற்கிடையே மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது குறித்த ஆராய்ச்சியில், கடலின் பிரம்மாண்டமான பாலூட்டியான போஹெட் திமிங்கிலங்கள் (Bowhead whales) புதிய நம்பிக்கையை அளித்துள்ளன. சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழும் இந்தத் திமிங்கிலங்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏன் வருவதில்லை என்ற கேள்வி இருந்தது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இந்த கேள்விக்கான மர்மத்தை உடைத்துள்ளனர்.
ஏன் முக்கியம்
'நேச்சர்' இதழில் வெளியான ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் சில முக்கியமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் மனித மரபணுவில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்து, ஆயுளை நீட்டிக்கும் ரகசியம் CIRBP எனப்படும் ஒரு புரதத்தில் ஒளிந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது DNAவில் ஏற்படும் உடைப்புகளைச் சரிசெய்வதில் CIRBP புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மற்ற பாலூட்டிகளை விட இந்த போஹெட் திமிங்கிலங்களின் உடலில் இந்த புரதம் 100 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே அவை நீண்ட காலம் உயிர் வாழ்கிறது.
அதிகரிக்கும் ஆயுள்!
திமிங்கிலங்களின் உடலிலுள்ள இந்த CIRBP புரதத்தை எடுத்து, பழ ஈக்கள் மற்றும் மனித செல்களில் செலுத்திப் பார்த்தபோது, மரபணுச் சீரமைப்புப் பணிகள் மிக வேகமாக நடந்தன. குறிப்பாக, பழ ஈக்களின் ஆயுட்காலம் இதனால் அதிகரித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான ஈக்களை விட இந்த புரதம் செலுத்தப்பட்ட ஈக்கள் அதிக காலம் வாழ்கிறதாம்.. உறைபனி நிலையில் இருக்கும் ஆர்க்டிக் கடலில் இந்தத் திமிங்கிலங்கள் வாழ்வதால், அந்தத் தீவிரக் குளிரானது இயற்கையாகவே இந்தச் சிறப்புப் புரதத்தின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
ஆய்வுகள்
இந்த ஆய்வில் அடுத்த கட்டமாக மனித உடலிலும் இந்தச் சிறப்புப் புரதத்தின் அளவை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்குத் தீர்வாக 'குளிர்ந்த நீரில் குளிப்பது' போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
200 ஆண்டுகள் மனிதன் வாழ்வது என்பது தற்போதைக்கு முடியாத ஒன்றாகத் தெரிந்தாலும், மரபணுச் சிதைவைச் சரிசெய்வதன் மூலம் நோயற்ற நீண்ட வாழ்வை வாழ முடியும் என்பதற்கான கதவை இந்தத் திமிங்கிலங்கள் திறந்துவிட்டுள்ளன. குளிர்ச்சியான சூழல் நமது ஆயுளைக் கூட்டும் என்ற இந்தத் தகவலை உறுதி செய்ய வரும் காலங்களில் ஆய்வுகள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.














Click it and Unblock the Notifications