OPEC அமைப்பை விட்டு வெளியேறிய UAE.. வளைகுடா நாடுகள் மத்தியில் பிளவு.. ஈரான் போரால் வெடித்த பிரச்சனை!
ஜெட்டா: உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பான OPEC மற்றும் அதன் விரிவான OPEC+ கூட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மே 1ஆம் தேதி முதல் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வளைகுடா நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் UAE தனது முடிவை அறிவித்துள்ளது.
இந்த முடிவு உலக எண்ணெய் அரசியலை முழுமையாக மாற்றியமைக்கும் அளவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஈரான் போர் இன்னும் முடியாத நிலையில் வளைகுடா நாடுகள் மத்தியில் இந்த புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கும் சரி, ஈரான் போரிலும் சரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சம் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளுக்குள் பதற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் இந்த முடிவுக்கு பின்னால் வளைகுடா நாடுகளுக்குள் இருக்கும் உள் முரண்பாடுகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயர் அதிகாரிகள், ஈரான் தாக்குதல்களின்போது பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து போதிய அரசியல் மற்றும் ராணுவ ஆதரவு கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) கூட்டமைப்புகளுக்குள் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டு பிராந்திய ஒற்றுமையையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OPEC அமைப்புக்கு பெரும் பின்னடைவு
ஏற்கனவே கச்சா எண்ணெய் உற்பத்தி இலக்குகள் மற்றும் புவியியல் அரசியல் விஷயங்களில் ஏற்கனவே சவுதிக்கும் - UAE-க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், தற்போது ஈரான் போரில் போதுமான உதவி கிடைக்காத நிலையில் பிரச்சனைகள் பெரிதானது.
இதன் காரணமாக UAE இந்த முக்கியமான அமைப்பில் இருந்து வெளியேறியது அமைப்பின் செல்வாக்கை குறைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் மேலும் பல நாடுகள் பிரிந்து செல்லும் சூழல் உருவாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
ஓபெக் அமைப்பின் மிக முக்கிய உறுப்பினர் நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இதேவேளையில் வளைகுடா நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருக்கும் UAE-யின் இந்த வெளியேற்றம் ஓபெக் அமைப்பின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
போரும்.. பிளவும்..
உலக எண்ணெய் சந்தை ஈரான் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகள் ஏற்கனவே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியிருக்கும் வேளையில் வளைகுடா நாடுகள் மத்தியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
ஓபெக் அமைப்பை விட்டு வெளியேறியதால் UAE இனி தனது விருப்பத்தின் அடிப்படையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும். OPEC அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என கட்டுப்பாடு இருக்காது. இதனால் மூலம் UAE அதிகளவிலான வர்த்தகத்தை பெறும்.
டொனால்ட் டிரம்புக்கு வெற்றி
இந்த நடவடிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. ஓபெக் அமைப்பை கச்சா எண்ணெய் விலையை திட்டமிட்டு கட்டுப்படுத்துவதாக பல முறை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ராணுவ பாதுகாப்புக்கு ஈடாக நியாயமான எண்ணெய் விலையை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.
இதையெல்லாம் மறந்து ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைந்து வளைகுடா நாடுகள் போரிட்டு வருகிறது. அமெரிக்காவின் பலதரப்பட்ட ஆதரவை எடுத்துக்கொண்டு அதிக விலைக்கு கச்சா எண்ணெய் விற்பது சரியல்ல என டிரம்ப் கூறிவந்த நிலையில், ஐக்கிய அரபு அமிரீகம் OPEC அமைப்பில் இருந்து வெளியேறியது மூலம் இனி கச்சா எண்ணெய் போட்டிப்போட்டு உற்பத்தி செய்யப்படுவது மூலம் விலை குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஹார்முஸ்-ஐ திறந்தால் போதும் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறையும் வழி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வெளியேற்றம் மூலம் உருவாகியுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
ஓபெக் அமைப்பின் ஒருங்கிணைப்பு பலவீனமடைந்தால் எண்ணெய் உற்பத்தி கொள்கைகள் சீர்குலையும். இதனால் எண்ணெய் விலையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படும். உலகப் பொருளாதாரம் ஏற்கனவே பணவீக்க அழுத்தத்தில் இருக்கும் நிலையில், எண்ணெய் விலை உயர்வு பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும். இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த நடவடிக்கை வெறும் ஒரு கொள்கை மாற்றம் மட்டுமல்ல. உலக எரிசக்தி அமைப்புகளில் மிகப்பெரிய மறுசீரமைப்பின் துவக்கப் புள்ளியாக பார்க்கப்படுகிறது.
ஓபெக் (OPEC) என்றால் என்ன?
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு தான் ஒபெக் எனப்படும் Organization of the Petroleum Exporting Countries. உலகில் முக்கியமான கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒன்றிணைந்து பெட்ரோலியம் தொடர்பான கொள்கைகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் ஒரு முக்கிய குழுவாகும்.
1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் அல்ஜீரியா, காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, காபன், லிபியா, நைஜீரியா, ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் வெனிசுவேலா ஆகிய 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மே 1ஆம் தேதி முதல் UAE வெளியேறும் காரணத்தால் 11 உறுப்பினர்கள் மட்டுமே கொண்டு இருக்கும்.
இந்த உறுப்பு நாடுகள் அவ்வப்போது சந்தித்து எண்ணெய் உற்பத்தி இலக்குகளை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, ஒருங்கிணைத்து நிர்வகிப்பதன் மூலம் உலக அளவிலான எண்ணெய் விலைகளை நிர்ணயம் சக்தி இந்த அமைப்பு பெறுகிறது.
தற்போது OPEC நாடுகள் சேர்ந்து உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 35 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. மேலும், உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் மொத்த எண்ணெயில் சுமார் 50 சதவீதத்தை இந்த அமைப்பு கட்டுப்படுத்துகிறது.















Click it and Unblock the Notifications