லக்னோ: வட மாநிலங்களில் இம்மாதம் 1ம் தேதி துவங்கிய துர்கா பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்கள் 5ம் தேதி வரை நடைபெறும்.
இவ்வாறு இருக்கையில், துர்கா தேவி சிலையின் பாதங்களை 'தொட்டு' வணங்கியதற்காக உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் கொடூரமான முறையில் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றமும் அதிகரித்து வருகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் தீண்டாமை கொடுமைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் சாமி சிலையை தொட்டதற்காக தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது நடந்து சில நாட்களே ஆன நிலையில் அதே மாநிலத்தில் வேறு ஒரு பகுதியில் தலித் சிறுவன் ஒருவன் திருடியதாக கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
தற்போது இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது, துர்கா தேவியின் சிலையை தொட்டதற்காக 52 வயது மதிக்கத்தக்க நபர் மீது சரமாரியாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பட்டி கோட்வாலி பகுதியில் உள்ள ஜஜ்னிபூர் கிராமத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய துர்கா பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்கள் 5ம் தேதி வரை நடைபெறும்.
இந்த பண்டிகையில் கலந்துகொண்ட ஜஜ்னிபூர் கிராமத்தின் தலித் சமூகத்தை சேர்ந்த ஜக்ரூப் கௌதம் எனும் நபர் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது சாமியின் பாதத்தை தொட்டு வணங்கியுள்ளார். இதனை கண்ட ஆதிக்க சமூகத்தினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து சிலர் கௌதமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கொளதமின் குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் நேற்று 17 வயது சிறுமியின் நிர்வாண உடல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது அனைவரிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த கொலை சம்பவம் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.