Advertisement

தென்னை மர உயரத்துக்கு சீறி எழுந்த ஊழிப் பேரலைகள்.. 50,000 ஈழத் தமிழர் உயிரை குடித்த ஆழிப்பேரலை!


கிளிநொச்சி: ஈழத் தமிழரின் தாயக பிரதேசமான இலங்கையின் வடகிழக்க்கு கரையோரங்களில் இன்று டிசம்பர் 26-லும் ஓவென ஒப்பாரி ஓலங்கள் நெஞ்சை பிழிய வைக்கின்றன..

இனப்படுகொலை துயரங்களை சுமந்த மக்களுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய தன்னாட்சி அரசாங்கம் அடைக்கலம் கொடுத்திருந்த 2004-ம் ஆண்டு காலம்..

நெடிய யுத்தத்துக்குப் பின்னர் வெடிகுண்டு சப்தங்கள் இருதரப்பிலும் ஓய்ந்திருந்த அமைதி ஒப்பந்த காலம் அது.. தமிழீழ தேசத்துக்குள் சிங்கள தேசத்தின் அனுமதியுடன் சர்வதேச முகங்கள் சுதந்திரந்திரமாக சென்று திரும்பிய சூழ்நிலை நிலவிய பொழுதுகள்..

ஆழிப்பேரலை ஊழித்தாண்டவமாடிய 15-ம் ஆண்டு நினைவு நாள்... உறவுகள் கண்ணீர் அஞ்சலி

இலங்கையில் அமைதி காலம்

ஒரு தீவுக்குள் இரு தேசங்களோ? இரு அரசாங்க கட்டமைப்புகளோ? முகிழக் காத்திருந்த முச்சூடும் மகிழ்வான காலம்... கரையோரங்களில் சீறிக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இன்னொருபக்கம் கடலோரங்களில் ஊடுருவி தாக்க முனைந்த இலங்கை கடற்படையின் டோராக்கள் முகாம்களில் முகாமிட்டிருந்தன.

ஆழிப் பேரலைகள்

இந்த பேரானந்தத்துக்கு பெருவேட்டு வைத்ததுதான் அந்த ஆழிப்பேரலைகள்... வான் நிறம் சுமந்த நீலக் கடல் விஷத்தைத்தான் சுமந்து வந்ததோ என விம்ம வைத்த விடிகாலைப் பொழுது..

Advertisement
Advertisement
பெரும் உயிர் சேதம்

பனைகளையும் தென்னைகளையும் உச்சம்தொட்டு முத்தமிட்டு சீறிப் பாய்ந்த ஆழிப்பேரலைகள் கரையோர உறவுகளை காவு கொண்டு சென்றன... துயில் கொண்டவர்கள் விழிதிறக்காமலே கடலன்னையின் அகோரப் பசிக்கு ஆளாகிப் போனார்கள்..

ஈழமே சின்னாபின்னமானது

அன்று இந்தோனேசியாவில் லட்சக்கணக்கானோர் ஆழிப்பேரலையின் அடாத வேட்கைக்குள் அடங்கிப் போயினர்... இந்திய தாய்நிலத்திலும் அதே பெருந்துயர்.. இவைகளைப் போல அந்த சின்னஞ்சிறு ஈழமும் சின்னாபின்னமாகிப் போனது..

கரையோரங்களில் கதறல்கள்

கடல்சார் வாழ்வை வாழ்ந்த ஈழத்து உறவுகளின் துயரம் சொல்லி மாளாதது.. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நந்திக் கடலில் மூழ்கிப் போன பெருங்கொடுமைக்கு சமிக்ஞை காட்டிப் போனதுதான் அந்த ஆக்ரோஷ ஆழிப்பேரலை ஆட்டம் என இப்போதும் ஈழத்து கடற்கரையோரங்களில் கதறலை கேட்க முடிகிறது..

மவுன அஞ்சலி

இன்றும் அந்த பெருந்துயரத்தின் பெருவலியை ஈழத் தமிழர் நினைவு கூர்ந்தனர்.. ஒட்டுமொத்த இலங்கையும் சில நிமிடங்கள் ஒருசேர மவுனித்து நின்றன.. தமிழர் தாய்நிலத்தில் உறவுகளை எண்ணி சுடரேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தினர் தமிழர்கள்.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Srilanka observed two-minute silence to commemorate 15 years of Tsunami disaster on today.
Read more...