சபாஷ் ஜெ!
கிரிமினல் சங்கராச்சாரி !
நாம் சொல்லவில்லை. அரசே சொல்லுகிறது !
காஞ்சி சங்கர மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதியை தமிழக போலீசார் கொலை வழக்கில் கைது செய்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும்.
ஜாமீனில் வெளியே வந்தாலும் சரி, நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று தன்னை ஜயேந்திரர் நிரூபித்து விடுதலையாகியே வந்தாலும் கூட, இந்தக் கைதுவரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வாகவே கருதப்பட வேண்டும்.
ஜயேந்திரர் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொண்டு வெளி வர முடியுமா முடியாதா என்பது இப்போது முக்கியமல்ல. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இறுதிஅப்பீலில் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் உடைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும், அத்தகைய தண்டனையைக் குறைக்கக் கோரி கருணைமனு அளித்தால் அதை பரிசீலிக்கக்கூடிய அதிகாரம் உள்ள குடியரசுத்தலைவர் வரையிலும் கடந்த காலத்தில் காஞ்சி மடத்தில் வந்து நமஸ்கரித்துக்கொண்டிருந்த வரலாற்றையும் இப்போது மறந்து விட வேண்டாம்.
காஞ்சி மடாதிபதிகளுக்கு எதிரான வழக்குகளில் முழு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் அதை ஹேக் நகரில் உள்ள ஐ.நாவின் உலக நீதி மன்றம்விசாரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
வழக்கின் முடிவு என்ன ஆனாலும் சரி, காஞ்சி சங்கராச்சாரிகளும் இந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அதன் கீழ் கைது செய்யப்படக்கூடியவர்கள்தான் என்பதை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முன்னுதாரணமாக (precedent) ஏற்படுத்தியிருப்பதுதான் முக்கியமானது.
போலி பகுத்தறிவு பேசும் கருணாநிதியால் ஒரு போதும் செய்திருக்க முடியாத இந்த சாதனையை கடவுள் பக்தையான ஜெயலலிதாசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வீராணம் , வீரப்பன் விவகாரங்களை விட இது ஒன்றிற்காகவே ஜெயலலிதா எல்லாபகுத்தறிவாளர்களாலும் எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியவர். அவருடைய முரட்டுப் பிடிவாதம்அவ்வப்போது இப்படி ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுகிறது.
சங்கராச்சாரிகள் ஏற்கனவே இந்த நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முழு தகுதி உடையவர்களாகவேஇருந்திருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியால் மதிக்கத்தக்கவர் என்று புகழப்பெற்ற மறைந்த பரமாச்சாரியார்சந்திரசேகரேந்திரரும் இதற்கு விதிவிலக்கல்ல. தீண்டாமையையும் வருணாசிரமத்தையும் பிடிவாதமாகவும் பகிரங்கமாகவும்ஆதரித்து பேசியும் எழுதியும் வந்தவர் அவர். அதற்காகவே அவர் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டிருக்கவேண்டும். ஜயேந்திரர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியிருப்பவற்றுக்காக, மத துவேஷத்தை தூண்டும் குற்றத்திற்காக வழக்குபோட்டிருக்க வேண்டும்.
ஜயேந்திரர் மீது தற்போது போடப்பட்டுள்ள வழக்கு பழைய பெரியவரின் நெருக்கமான பக்தர் சங்கரராமன் என்பவரைக்கொலை செய்தது பற்றியதாகும். சங்கரராமன் ஒன்றும் முற்போக்காளர் அல்ல. அவர் பழையவரின் சனாதனக் கொள்கைகளில்ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். பெரியவர்
மறைவுக்குப் பின் சங்கர மடத்தில் நடக்கும் பல சம்பிரதாயப் பிறழ்வுகள், ஊழல்கள், முறைகேடுகள் பற்றியெல்லாம் சங்கர ராமன்புனைப்பெயரில் மடத்துக்கும் பத்திரிகைகளுக்கும் கடிதங்கள் எழுதி வந்ததோடு நிற்காமல் கோர்ட்டிலும் அவ்வப்போதுவழக்குகள் போட்டிருக்கிறார். ஜயேந்திரர் சீன நாட்டுக்கு செல்வது சனாதன மரபுக்கு முரண்பட்டது என்று அவர் தொடுத்தவழக்கையடுத்து தான் சீனம் செல்லும் உத்தேசம் இல்லை என்று ஜயேந்திரர் கோர்ட்டில் சொல்லி வாபஸ் வாங்கினார். இதுதவிரவும் ஜயேந்திரரின் வாரிசு உரிமைக்கெதிராக சங்கர்ராமன் வழக்கு தொடுக்கப்போவதக அறிவித்தார். அதையடுத்துஅவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.
காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாக ஊழியராக இருந்த சங்கர்
ராமனை கோவிலுக்குள்ளேயே சென்று செப்டம்பர் 2004ல் ஒரு கூலிப்படை வெட்டிக் கொலை செய்தது. கூலிப்படையினர் பலரும்போலீசால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களை ஏவியது காஞ்சி சங்கர மடாதிபதி ஜயேந்திரர்தான் என்பதற்குபோதுமான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் அதையடுத்தே அவர் இப்போது கைது செய்யப்படுவதாகவும் காவல் துறைதெரிவித்துள்ளது.
காஞ்சி, மதுரை, திருவாவடு துறை, என்று எந்த மடமாயிருந்தாலும், அது பார்ப்பன மடமானாலும் சரி சூத்திர மடமானாலும் சரி,அவற்றில் வாரிசு சண்டைகளும் மோதல்களும் ஊழல்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. காஞ்சி மடம் மட்டும் அதற்குள்ளபிரும்மாண்டமான செல்வாக்கால் சட்டத்தின் பிடியிலிருந்து எப்போதும் தப்பி வந்திருக்கிறது.
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் ஜயேந்திரர் கைது நடந்திருப்பது பல கேள்விகளை, விவாதங்களை எழுப்பியுள்ளது. கட்டாயமத மாற்றத் தடைச் சட்டம், திருக்கோவில் அன்னதான திட்டம் போன்றவை ஜயேந்திரர் யோசனையின் பேரில் ஜெயலலிதாமேற்கொண்ட திட்டங்கள் என்ற அனுமானமே இதற்குக் காரணம்.
உண்மையில் அவை எல்லாம் ஜயேந்திரர் சொன்னபடி கேட்டு செய்தவை என்று கருதுவதை விட, அந்த சமயத்தில் பி.ஜே.பியின்ஆதரவு சக்திகளையெல்லாம் நேரடியாக அ.தி.மு.க பக்கம் திருப்பி ஓட்டு சேகரித்துக் கொள்ள ஜெயலலிதா மேற்கொண்டஅரசியல் உத்திகள் என்று கணிப்பதே சரியாக இருக்க முடியும்.
ஓட்டையும் பணத்தையும் தவிர வேறு எந்த லெளகீக சக்தியும் நம்முடைய அரசியல்வாதிகளை - கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா,ராமதாஸ் வகையறாக்களை -- இயக்குவதாக நான் கருதவில்லை. இதில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும்மற்றவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இவர்கள் இருவரும் மக்களிடையே தங்களுக்கு இருக்கும் கவர்ச்சியை(charisma) மட்டுமே தங்கள் பிரதான பலமகக் கருதுகிறவர்கள். அதனால்தான் எம்.ஜி.ஆரால் சாதியைப் புறக்கணித்துவிட்டுவேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடிந்தது.
எனவே எப்படி ஜெயலலிதா இப்படி ஜயேந்திரருக்கு எதிரான நடவடிக்கையை துணிச்சலாக எடுக்க நேர்ந்தது என்ற ஆராய்ச்சிஅர்த்தமற்றது. அது சில புலனாய்வு இதழ்களுக்கு வேண்டுமானால் சில வாரத் தீனிக்குப் பயன்படலாம்.
தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகிற கடவுளைத் தவிர வேறு எவரையும் கருதுவதாக எனக்குத்தெரியவில்லை. தானே சிறைக்கு அனுப்பப்பட்ட பிறகு வேறு எவரையும் கைது செய்து சிறையில் அடைப்பது அதை விடக்கடுமையான ஒன்றாக அவருக்குத் தோன்றும் வாய்ப்பு இல்லை.
கலைஞர் கருணாநிதியின் அரசியல் வேறு விதமானது. ஓட்டுக்கு பயன்படும் எல்லா சக்திகளுடனும் அவர் ஏதாவது ஒரு விதத்தில்சமரசம் செய்து கொண்டே தான் இருப்பார். அவருக்கு தமிழ் தேசீயரும் வேண்டும். பரமாச்சாரியாரியின் பக்தர்களின் ஓட்டும்வேண்டும். அதனால்தான் எவ்வளவு பகுத்தறிவு பேசினாலும் போலி சாமியார்கள் பற்றி அலங்காரமாக அறிக்கைகள்வெளியிட்டாலும், சன் டிவியில் தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறைகூவல் விடுப்பதை அவரால் ஒருபோதும் நிறுத்த முடியாது. அதனால்தான் ஓட்டுக்கு பயன்படும் என்று கருதி பொடாவில் இருக்கும் வைகோவுக்குக் குரல்கொடுத்தார். ஒட்டுக்கு உதவாத நெடுமாறனுக்கான குரல்களில் கடைசி நொடியில் மட்டுமே வந்து சேர்ந்து கொண்டார். நிச்சயம்ஓட்டுக்கு உதவாதவர்கள் எனப்படும் நக்சல்பாரி பெண்கள் இன்னமும் பொடா சிறையில் இருப்பது பற்றி வீரப்பனுக்கு அவர்செலவிட்ட சொற்களில் நூறில் ஒரு பங்கு கூட அவர் செலவிடமாட்டார்.
ஜயேந்திரரை அரசு கைது செய்யக் காரணம் தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மு.க ஸ்டாலின் தலைமையில்காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளவிருந்த உண்னாவிரதப் போராட்டம்தான் என்று சித்திரிக்க தி.மு.கவும் சன்.டிவியும் முயற்சிக்கின்றன.கைதுக்கு சில நாட்கள் முன்பே இது குறித்த தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன. அதன் பிறகே தி.மு.க உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தது.
தவிர தி.மு.கவின் போராட்டத்துக்கு அஞ்சியெல்லாம் ஜெயலலிதா இத்தகைய நடவடிக்கை எடுக்கக் கூடியவர் அல்ல. தி.மு.கபோராட்டம் தீவிரமாக நடக்கும் என்று அவருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்திருந்தால், அது ஜயேந்திரருக்கு சாதகமாகப்போயிருக்கக்கூடிய வாய்ப்பே அதிகம்.
காஞ்சி கொலை வழக்கில் ஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தும் வந்தபெருமை யாருக்காவது உண்டென்றல் அது பெரியார் திராவிடர் கழகத்துக்கே உரியது. கைதுக்குப் பின் அதை எந்த வழவழகொழாகொழாவுமின்றி இடதுசாரிக் கட்சிகள் தெளிவாக வரவேற்றிருப்பதும் பாராட்டுக்குரியது.
ஓட்டு கைவசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் எல்லா முகமும் காட்டுவதே கலைஞரின் அரசியல் பாணி. தன் சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் ஜெயல்லிதாவுக்கோ, அதனால் ஏற்படும் சில பிரிவினரின் ஓட்டு இழப்பைஎல்லாம் தன் கவர்ச்சி செல்வாக்கினால் சரி செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையே அரசியல் பாணி.
ஜயேந்திரருக்கு தமிழ் நாட்டில் ஓட்டு வங்கி எதுவும் கிடையாது என்பது ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் நன்றாகவேதெரியும். பழைய பெரியவருக்கேனும் கொஞ்சம் ஓட்டு இருக்கலாம். ஜயேந்திரரின் ஓட்டு வங்கி என்பது ஆர்.எஸ்.எஸ்மட்டும்தான். அதுவோ கலைஞர், ஜெயலலிதா வகையறாக்களுக்கு எந்த விதத்திலும் தரம் குறையாத சந்தர்ப்பவாத அமைப்பு.காந்தியைக் கொன்று விட்டு காந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்தது போல தேவையானால் ஜயேந்திரரை விட்டுவிட்டுபெரியாரைக் கூட தூக்கிப் பிடிக்கும். இதர மதத்தினரை ஒழித்துக் கட்டத் தேவையான அதிகாரம் கிட்டுமானால் அதற்காகஅவர்கள் பைபிளையும் குரானையும் கூடப் போற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள்.
உண்மையில் சங்கர மடத்தின் செல்வாக்கு என்பது மக்களிடம் இருக்கும் செல்வாக்கு அல்ல. சுமார் 60 வருடங்களுக்கு முன்பேஎழுத்தாளர் கல்கி ஆனந்தவிகடன் தலையங்கத்தில் எழுதிவிட்டார். காஞ்சி சங்கராச்சாரியார் என்பவர் லோக குரு அல்ல. ஒருமதத்தின் தலைவரும் அல்ல. ஒரு சாதியின் தலைவரும் அல்ல. அதில் ஒரு பிரிவின் தலைவரும் அல்ல. ஒரு மடத்தின் நிர்வாகத்தலைவர் மட்டும்தான் என்று.
எனவே சங்கர மடத்துக்கு இருக்கும் செல்வாக்கு உயர் பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள்ஆகியோரைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்ட சட்ட விரோதமான செல்வாக்கு மட்டும்தான்.
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர் உடனே அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம்செய்து வந்த பி.ஜே.பியின் தேசியத் தலைவர் இல. கணேசன் விடியற்காலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுஅழைத்து வரப்படும் ஜயேந்திரரை வரவேற்கக் காத்திருந்து கண்ணீர் மல்குகிறார். இது துரதிர்ஷ்டவசமானது என்கிறார். விஸ்வஹிந்து பரீஷத், இந்து முன்னணி, இந்து பேரவை என்று விதவிதமான பெயர்களில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனைஆர்.எஸ்.எஸ் அவதாரங்களும் ஜயேந்திரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாவற்றையும் அறிவித்துள்ளன.
ஜயேந்திரரின் கைது எல்லா பூனைக் குட்டிகளையும் கோணிப்பையிலிருந்து அவிழ்த்துவிட்டுவிட்டது. ஜயேந்திரர் கைது பற்றிமுறையிட, ஆளுநர் பர்னாலாவை சந்திக்க தமிழ்நாட்டின் புகழ் பெற்ற சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், மருத்துவர்கள்
பத்ரிநாத், ரங்கபாஷ்யம், நாரத கான சபா பிரமுகரும் வக்கீலும் சோவின் துக்ளக்கில் தொடர்ந்து சட்ட ஆலோசனைப் பகுதி எழுதிவருபவருமான என்.கிருஷ்ணசாமி ஆகியோர் உடனடியாக விரைகிறார்கள்.
அடுத்த சில வாரங்களில் காஞ்சி மடத்தின் திரை மறைவு தரகர்கள் பலரும் பகிரங்கமாக வரும் வாய்ப்பு இருக்கிறது. இந்தபகிரங்கம் வரவேற்கப்பட வேண்டியதாகும்.
ஆனால் உண்மையில் இனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம் ஒன்றுதான். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்அதிகாரிகள், நீதிபதிகள், பிரதமர்கள் , குடியரசுத்தலைவர்கள் என்று சங்கர மடத்தில் சரணாகதி அடைந்தவர்களுக்கும் மடத்தின்நிதி விவகாரங்களுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும். தன்னுடைய விஷன் 2020ல் சங்கரமடத்துக்கு எத்தகைய இடம் இருக்கும் என்பதை இனியேனும் அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். பொதுவாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடனும் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்றுஅறிவிக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு கோரிக்கை உண்டு. இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இதே ஜயேந்திரருக்காகவக்காலத்து வாங்கி என்னையும் நண்பர் சின்னக் குத்தூசியையும் அவதூறு செய்த துக்ளக் ஆசிரியர் சோ இப்போதேனும்எங்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். (விவரங்கள்: ஏப்ரல் 2003 தீம்தரிகிட இதழில்)
ஜயேந்திரருக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் எங்களுக்கு இருக்கலாம் என்றும் அப்போது சொன்ன சோ,இப்போது நீதிமன்றத்தில் போய் ஜயேந்திரர் பொய் சொல்லமாட்டார் என்று சாட்சியம் சொல்வாரா என்ன ?
பகுத்தறிவாளர்கள் ஒவ்வோராண்டும் இனி நிச்சயம் தீபாவளியைக் கொண்டாடுவார்கள் - தீபாவளியாக அல்ல. அறிவொளிதினமாக. 2500 ஆண்டு கால மடத்தின் உண்மை ரூபத்தை ஒரே மணி நேரத்தில் உலகுக்கு அறிவித்த நாளாக.
(தீம்தரிகிட நவம்பர் 16--30)
- ஞாநி([email protected])
ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள்பின்வரும் முகவரியில் முயலலாம்.
ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.