செம்மொழி சிக்கல்!
செம்மொழிச் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. தமிழைச் செம்மொழியாக அறிவித்தபோதே முறையாகச் செய்யாதது பல குழப்பங்களுக்கு வழிவகுத்துவிட்டது.
சமஸ்கிருதத்திற்கு இணையான தகுதியைத் தமிழுக்கு அளிக்கக்கூடாது என்பதற்காகத் தமிழின் பழமையை ஆயிரம் ஆண்டுகளாகக் குறைத்து இழிவு செய்தனர்.கல்வித்துறை செய்ய வேண்டிய அறிவிப்பைக் கொஞ்சமும் தொடர்பு இல்லாத பண்பாட்டுத் துறையின் மூலம் செய்தனர். இதன் மூலம் தமிழறிஞர்களின் கடும்எதிர்ப்பைத் தேடிக் கொண்டனர்.
முதற்கோணல் முற்றும் கோணலானதைப் போல இப்போது மேலும் சில குழப்பங்கள் உருவாகியுள்ளன. செம் மொழிப் பட்டியலில் கன்னடத்தையும்சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் கன்னட மொழியறிஞர்கள் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம்இதற்காக மனு தரப்பட்டது.
மத்திய அமைச்சர் எம்.இராசசேகரன் கடந்த மே27ஆம் தேதியன்று பெங்களூர் வந்தபோது கன்னட மொழி அறிஞர்களான எம்.சித்தானந்த மூர்த்தி,எல்.எஸ். சேஷகிரிராவ் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர் கன்னடத்தைச் செம்மொழியாக அறிவிக்கும்படி வற்புறுத்தினர்.
கர்நாடக ஆளுனர் டி.என்.திரிவேதி அவர்களிடம் கன்னட மக்கள் சார்பில் சமூக சேவகர் எஸ்.கே.இராமசாமி தலைமையிலான குழு இது போன்றமனுவை அளித்தது. இதன் விளைவாக மத்திய அரசு செய்வது இன்னது என்பது அறியாமல் திணறுகிறது.
செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமானால் ஒரு மொழி எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய ஒரு குழுவைநியமித்துள்ளது.
சாகித்ய அகாதமி தலைவர் கோபிசந்த்ராவ், மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவத்தின் இயக்குனர் உதய நாராயண சிங், சவகர்லால் நேருபல்கலைக்கழகப் பேராசிரியர் அன்விதா அபி, டில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.வி.சுப்பாராவ், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் பி.என்.பட்நாயக்,ஐதராபாத் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பி.எச். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இக்குழுவினர் இருமுறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்(28-5-2005) செய்தி வெளியிட்டுள்ளது.
இக்குழுவில் தமிழறிஞர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏற்கெனவே 2000 ஆண்டு பழமையான மொழி செம்மொழியாகும் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட நடைமுறையாகும்.அதை ஏற்காமல் புதிய குழுவை நியமித்திருப்பது காலங்கடத்தும் தந்திரமாகக் கருதப்படுகிறது.
- தென் செய்தி தலையங்கம்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.