பூக்கள் பார்த்து நேரம் சொன்ன தமிழன்!
நொடி, நிமிடம், மணி என்று இப்போது நேரத்தை நாம் கணக்கிடுகிறோம். அதேபோல, 24 மணி நேரம் சேர்ந்தால்ஒரு நாள் என்றும், ஒரு நாளை காலை, முற்பகல், பிற்பகல், மாலை, இரவு என்றும் பிரித்துக் கூறுகிறோம்.
தமிழர்கள் ஆரம்ப காலத்தில் நாட்கணக்கையும், நேரக் கணக்கையும் எப்படி மதிப்பிட்டு அழைத்து வந்தார்கள்என்று அறிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது.
கடிகாரம் போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் துல்லியமாக நேரத்தைக் கணக்கிட்டுக் கூறும் திறமைபடைத்தவர்களாக நம்மவர்கள் விளங்கினார்கள், அந்த அளவுக்கு அவர்களது நேரக் கணக்கீட்டு முறைஅமைந்திருந்தது.
நன்னூல் தரும் விளக்கம்:
நாழிகை, நாடி, விநாடி, நிமிடம், மணி, முகூர்த்தம் என்ற அலகுகளில் நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.
60 நாடிகள் (நாடித் துடிப்பு) சேர்ந்தது ஒரு நாழிகை. 1 நாழிகை என்பது 24 நிமிடங்களுக்கு சமம். இரண்டரைநாழிகை என்பது ஒரு மணியாகும். மூனே முக்கால் நாழிகை என்பது ஒரு முகூர்த்தமாகும்.
நாடியை நொடி என்றும் கூறுவர். இதை எப்படிக் கணக்கிடுவது? நன்னூலில் இது அழகுற விளக்கப்பட்டுள்ளது.
"உன்னல் காலே, எடுத்தல் அரையே, முறுக்கல் முக்கால்" என்று கூறுகிறது நன்னூல்.
ஆங்கிலத்தில் கூறப்படும் நிமிடத்திற்கும் (Minute), தமிழில் கூறப்படும் நிமிஷத்திற்கும் நிறையவே வேறுபாடுகள்உண்டு. "நிமி" என்பதற்கு தமிழில் இமை என்று பொருள். ஒரு கண் இமைப்புதான் நிமிஷம். இதுவே பின்னர் நிமிடா(நிமிடம்) என்று மாறியுள்ளது.
நிமிஷமான நிமையம்:
ஆங்கில வார்த்தையான மினிட் என்பதிலிருந்துதான் நிமிஷம் என்ற தமிழ் வார்த்தை உருவானதாக சிலர் தவறாகப்பொருள் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டுமே வேறு, வேறானவை.
நிமையம் என்பதுதான் பின்னர் நிமிஷம் என்றானதாக தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார். நிமைஎன்பதற்கு இமை என்று பொருள்.
இப்போது முகூர்த்தம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மூனே முக்கால் நாழிகை சேர்ந்ததுதான் ஒருமுகூர்த்தம். அதாவது 90 நிமிடங்களைக் குறிக்கும். 2 முகூர்த்தம் என்பது ஒரு யாமம் ஆகும். யாமம் என்பதுஇரவைக் குறிக்கும்.
இந்த காலங்களைக் கணக்கிட என்ன முறையை பழந்தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு சரியானஆதாரங்கள் இல்லை. இருப்பினும் கோழி கூவும் நேரம், வெள்ளி முளைக்கும் வேளை, உச்சி வெயில் நேரம்,அந்தி சாயும் நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம், காலத்தை தமிழர்கள் கணித்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.
அறிவியலை பயன்படுத்திய தமிழன்:
பத்துப்பாட்டு பாடல்களில் ஒரு குறிப்பு வருகிறது.
அதில் கடிகாரம் குறித்து கூறப்பட்டுள்ளது. கன்னல் அல்லது நாழிகை வட்டில் எனும் பொறியை தமிழர்கள்பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.
இந்த நாழிகை வட்டில் என்பது இரண்டு கலங்களை கொண்டது. கீழே உள்ள கலத்தில் நீர் நிரப்பி, அதனுள்ளே நீர்ப்பரப்பின்மீது அடில் துளையுடைய பிறிதொரு கலத்தை வைத்து விடுவர். உட் கலத்தினுள்ளே நீர் மட்டம் உயர்வதைவைத்துப் பொழுதறியப்படும்.
கிட்டத்தட்ட sand clock மாதிரி!
பூக்களைப் பார்த்து..
இதேபோல பூச்செடிகளை வளர்த்து அது பூப்பது, கூம்புவது (வாடுவது) ஆகியவற்றை வைத்துபொழுதறிந்துள்ளனர். முல்லை மலர் தவறாமல் சூரியன் சாயும் நேரத்தில் மலருமாம்.
அந்தி மந்தாரை பூ சரியாக மாலை 5 மணிக்கு பூக்கும் என்பார்கள். அந்தியில் பூப்பதால் அந்தி மந்தாரை!
தமிழ் கால அளவு, நாள், திதி, மாதம், ஆண்டுகள் குறித்த ஒரு பார்வை:
கால அளவு:
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
நாட்கள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
திதிகள்:
பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி,திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி, அமாவாசை.
மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.
பக்ஷங்கள்:
கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்.
பருவங்கள் (ருதுக்கள்):
இளவேனில் (வசந்த ருது), துவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது),முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது).
ஆயனம்:
6 மாதங்கள் அடங்கியது ஒரு ஆயனம். மொத்தம் 2 ஆயனங்கள்
உத்தராயனம் -சூரிய ஒளிக் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு வடக்கே நேரடியாக வீழும் காலம்.
தக்ஷினாயனம் - நில நடுக்கோட்டிற்கு தெற்கே வீழும் காலம்.
ஆண்டுகள்:
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.பிரமோதூத
5.பிரஜோத்பதி
6.ஆங்கீரச
7.ஸ்ரீக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈஸ்வர
12.வெகுதான்ய
13.பிரமாதி
14.விக்கிரம
15.விஷூ
16.சித்திரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்தீப
20.விய
21.சர்வசிஷ்து
22.சர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜெய
29.மன்மத
30.துன்கி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.பிளவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விஸ்வவசு
40.பராபவ
41.பிளவங்க
42.கீலக
43.செளமிய
44.சாதாரண
45.விரோதிக்ருது
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷ
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
கடித எந்திரம்:
காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள்பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.
இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள்.இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக்கருவி உதவியதாம்.
இது குறித்த விளங்கங்கள் தெரிந்தோர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமே!
- அறிவழகன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.