புதிய தலைமைச் செயலகத்திற்காக கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது
சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் எழிலுற கட்டப்படவுள்ளது.இதற்காக அந்த வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சிபிசிஐடி தலைமை அலுவலகமும் இடிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் புகழ் பெற்ற கலைவாணர் அரங்கமும் இடிக்கப்படவுள்ளது.
1954ல் சட்டசபை கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட பெருமை கொண்டது கலைவாணர் அரங்கம். பல புகழ் பெற்ற தேசியத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் உரையாற்றிய பெருமையும் கொண்டது.
தற்போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.
1957ம் ஆண்டு இந்த அரங்கத்துக்கு 'பாலர் அரங்கம்' என்று பெயர் சூட்டினார் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. குழந்தைகள் பங்குபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் இந்த அரங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
குழந்தைளுக்கான திரைப்படங்களும், தரமான ஆங்கில படங்களும் திரையிட்டு காண்பிக்கப்பட்டு வந்தன. குழந்தைகளுடன் பெரியவர்களும் இந்த படங்களை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
பின்னர் பாலர் அரங்கத்தில் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அரசு முடிவுசெய்து, புதுப்பித்து, 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது கலைவாணர் அரங்கம் என பெயர் மாற்றம் கண்டது. புதிய கலைவாணர் அரங்கத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இத்தகைய பெருமை படைத்த கலைவாணர் அரங்கம் தற்போது இடிபடவுள்ளது. இருப்பினும் அருகே உள்ள காலியிடத்தில் புதிய கலைவாணர் அரங்கம் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது 3000 இருக்கைகள் கொண்டதாக அமையும்.
தற்போது ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அவற்றை முடிப்பதற்கு வசதியாக வருகிறசெப்டம்பர் மாதம் வரை இடிப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.