யுஎஸ்-ரிச்மாண்ட் கோவிலில் முருகனுக்கு சன்னதி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் இந்துக்கள் அங்கு இந்து பாரம்பரியத்தை போற்றும், வளர்க்கும் வகையில் விர்ஜினியா இந்து மையத்தை துவக்கியுள்ளனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகின்றன.
வாரநாட்களில் காலை 7 முதல் 9 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் பெறலாம். சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையம், ஞாயிறுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 5.30 மணி முதல் 7.30 வரையிலும் தரிசனம் செய்யலாம்.
இந்த மையத்தில் சிவன், பெருமாள், விநாயகர், கிருஷ்ணர், அனுமன் மற்றும் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இங்கு 10ஆண்டுகளுக்கு முன் முருகன் படம் வைக்கப்பட்டு, பூஜைகள் நடக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர்கள் உற்சவ மூர்த்தி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சிலைகளை வழங்கினர்.
இதை தொடர்ந்து இக்கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக திருக்கார்த்திகை, தைப்பூசம், வள்ளி திருமணம், கந்த சஷ்டி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு விஸ்தரிப்பு பணிகளில் இறங்கியுள்ளது. இந்த பணிகளை 2010க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. முருகனுக்கு தனி சன்னதி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு கல்வி மையத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தையும் செம்மையாக முடிக்க ரூ. 25 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை பக்தர்களின் நிதி உதவி மூலம் பெற தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை அறங்காவலர் குழு துவக்கியுள்ளது.
திருப்பணிக்கு ரூ. 10 ஆயிரம் டாலருக்கு மேல் கொடுக்கும் பக்தர்களின் உறவினர்கள் அல்லது அவர்களுக்கு விருப்பமான 10 பேரின் பெயர்கள் கோவில் தூண்களில் பொறிக்கப்படும். 500 அமெரிக்க டாலர் கொடுப்பவர்களின் பெயர்கள் தூண்களுக்கு இடையே உள்ள கற்களில் பொறிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு www.hinducenterofvirginia.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.