மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊர்திப் படி உயர்வு-கருணாநிதி
சென்னை: மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற அலுவலர்களுக்கான ஊர்திப் படியை உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட ஊர்திப்படி மாதம் 150 ரூபாய் என்பது 1-6-2009 முதல் 300 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி ஏற்கெனவே ஆணையிட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊர்திப் படி 300 ரூபாய் என்பதை, 1-10-2010 முதல் மாதம் 1,000 ரூபாயாக மேலும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று (7-10-2010) ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக, ஏறத்தாழ 10 ஆயிரம் மாற்றுத் திறனாளிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு ஆண்டொன்றுக்கு 8 கோடியே 40 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுடன் செல்பவர்களுக்கும் சலுகை:
அதே போல இனி மாற்றுத் திறனாளிகளுடன் பயணிக்கும் அவர்களின் உதவியாளருக்கும் கட்டணச் சலுகை உண்டு, என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அனைத்துவகை மாற்று திறனாளிகளும் பாகுபாடின்றி நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்வதற்கு தமிழக அரசு சலுகை வழங்கி உள்ளது.
இதற்கு மாற்று திறனாளிகள் பஸ்சில் பயணம் செய்யும்போது, மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அசலினை காண்பித்து அட்டையின் நகல் ஒன்றினை நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு உதவிக்கு உடன் வரும் ஒரு துணையாளருக்கு, அரசு பஸ்களில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துணையாளரின் உதவியின்றி பயணம் செய்ய இயலாத மாற்று திறனாளிகள் மேற்கண்ட சலுகையை பயன்படுத்தி அவருடன் துணையாளர் ஒருவரை அழைத்து செல்லலாம்.
துணையாளரை அழைத்து செல்ல விரும்பினால் அந்த மாற்று திறனாளிகள், துணையாளரின் உதவியின்றி பயணம் செய்ய இயலாது என உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அதன் நகல் ஒன்றினை ஒப்படைக்க வேண்டும்.
இந்த வாய்ப்பினை மாற்று திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்டங்கள் தோறும் அதிகாரிகள் மாற்று திறனாளிகளிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.